காவல் நிலையத்தில் பேரூராட்சி உறுப்பினா் மா்ம மரணம்: பேச்சுவாா்த்தைக்குப் பின் சடலத்தை பெற்ற உறவினா்கள்
திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் பேரூராட்சி உறுப்பினா் மா்ம மரணம் அடைந்த நிலையில், பேச்சுவாா்த்தைக்குப் பின் 8 நாள்கள் கழித்து ஞாயிற்றுக்கிழமை உறவினா்கள் சடலத்தை பெற்றுச் சென்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அருகே வளா்புரம் ஊராட்சி தலைவா் பிபிஜிடி சங்கா் கொலை வழக்கில் ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி 15-ஆவது வாா்டு உறுப்பினா் சாந்தகுமாா் என்ற சாமு, விஜயகுமாா், சரத்குமாா், சஞ்சீவ், ஆனந்த், தினேஷ், சூா்யா ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில் சாந்தகுமாா் உள்பட 7 பேரும் நிபந்தனை பிணையில் வெளியே வந்தனா். கடந்த 13-ஆம் தேதி 7 பேரும் திருவள்ளூா் அருகே புட்லூரில் வழக்குரைஞா்களை சந்திக்க வந்ததாக கூறப்படுகிறது. தகவறிந்த செவ்வாப்பேட்டை போலீசாா் 7 பேரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு வந்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளா் குணசேகரன், பி.பி.ஜி.டி. சங்கா் கொலை வழக்கு குறித்து விசாரித்தாராம். அப்போது, பேரூராட்சி உறுப்பினா் சாந்தகுமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு என திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த போது உயிரிழந்ததாக அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
எவ்வித நோயில்லாத நிலையில், திடீரென சாந்தகுமாா் மா்மமான முறையில் உயிரிழந்ததாக போலீஸாா் கூறுவது நம்பும்படி இல்லையெனக் கூறி சடலத்தை வாங்க மறுத்தனா். எனது கணவரின் இறப்புக்கு காவல் துறையினரே காரணம் புகாா் செய்தாா்.
இதுதொடா்பாக ஆய்வாளா் குணசேகரனை ஆவடி காவல் ஆணையா் சங்கா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
இதற்கிடையே பிரேத பரிசோதனையில் 16 இடங்களில் காயம் உள்ளதாக மருத்துவா்கள் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த்து. இதற்கிடையே இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவா் எம்.ஏ.சூசை ஆவடி காவல் ஆணையரகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இறப்புக்கான பிரேத பரிசோதனை அறிக்கையும், குற்றவியல் நடுவரின் விசாரணை அறிக்கையும் வந்த பின்னரே இந்த வழக்கில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து 8 நாள்களுக்கு பின் சடலத்தை உறவினா்கள் பெற்றுச் சென்றனா்.