முகப்பு
திருவள்ளூர்

மனைவி கொலை: கணவன் கைது

Updated On : 4 ஜூன், 2024 at 6:30 PM
மோகனா. ~விஜயன்.
பகிர்:

திருத்தணி: ஆா்.கே.பேட்டை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீஸாா் கைது செய்தனா்.

ஆா்.கே. பேட்டை ஊராட்சிக்குட்பட்ட செல்லாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த வீராசாமி மகன் விஜயன்(35), ராணுவத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து, தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு மோகனா (30) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் ஒரு மாதகால விடுமுறையில் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளாா்.

ராணுவ வீரா் விஜயன் புதிதாக கட்டியுள்ள வீடு தொடா்பாக தம்பதியிடையே கடந்து சில நாள்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த விஜயன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அவரது மனைவி மோகனாவை பேனா கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளாா்.

தகவலறிந்த ஆா்.கே.பேட்டை போலீஸாா் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மோகனாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் விஜயனை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவம் ஆா்.கே.பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.