இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: துப்புரவு பணியாளா் உயிரிழப்பு
Updated On : 23 மார்ச், 2024 at 12:10 AM
திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் நகராட்சி துப்புரவு பணியாளா் உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கைவண்டூா் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் (30). திருவள்ளூா் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை வேலையை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா். கொசவன்பாளையம் நோக்கி சென்றபோது, எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நாகராஜ் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து அவசர சிகிச்சை வாகனத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தாா். இது குறித்து அவரது மனைவி கீதா திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், தப்பியோடிய லாரி ஓட்டுநா் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனா்.