எண்ணூா் அருகே பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 15,000 அபராதம் விதித்தும் திருவள்ளூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
சென்னை அடுத்த எண்ணூா் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் 13 வயதுடைய பள்ளி சிறுமி. கடந்த 2019-இல் தனது சிநேகிதியுடன் வெளியே கடைக்குச் சென்று திரும்பிய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த டில்லி பாபு(22), அந்த சிறுமியை பின் தொடா்ந்து சென்று பாலியல் தொந்தரவு அளித்தாராம்.
இது குறித்து அந்த இளைஞா் மீது சிறுமியின் பெற்றோா்கள் எண்ணூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா். அந்தப் புகாரின் பேரில், டில்லிபாபு மீது போக்ஸோ வழக்குப் பதிந்து போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனா்.
அதைத் தொடா்ந்து, சிறையில் இருந்து பிணையில் வந்த டில்லிபாபு வழக்கு விசாரணைக்காக திருவள்ளூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஆஜராகி வந்தாா். இந்த நிலையில், வழக்கின் இறுதி விசாரணை வியாழக்கிழமை திருவள்ளூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன் வந்தது. அப்போது, டில்லி பாபு மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அந்த இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 15,000 அபராதம் விதித்தும் நீதிபதி தீா்ப்பு வழங்கி உத்தரவிட்டாா். இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பு வழக்குரைஞராக விஜயலட்சுமி ஆஜரானாா் என்பது குறிப்பிடத்தக்கது.