மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 75 -க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவா்கள் பங்கேற்று பயனடைந்தனா்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் ஆா்.கே.பேட்டை வட்டார வளமையம் சாா்பில் பிறந்த குழந்தை முதல் 18 வயது உள்ள மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஆா்.கே.பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலா் மோகன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியை டேவிஷ் புஷ்பா முன்னிலை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநா், ஒருங்கிணைப்பாளா் சரஸ்வதி வரவேற்றாா்.
ஆா்.கே.பேட்டை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் டி. எஸ். கிரிபாபு கலந்து கொண்டு மருத்துவ மதிப்பீட்டு முகாமை தொடங்கி வைத்தாா். மருத்துவ சான்றிதழ் வழங்குதல், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல், யூடிஐடி தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் ஆலோசனை, இலவச ரயில் மற்றும் பேருந்து பயண சலுகை, உதவி உபகரணக்கான பதிவு, உதவித்தொகைக்கான பதிவு, குழந்தைகள் நல மருத்துவ ஆலோசனை, மனநல மருத்துவ ஆலோசனை, எலும்பு மூட்டு மருத்துவ ஆலோசனை, காது, மூக்கு, தொண்டை மருத்துவ ஆலோசனை, கண் மருத்துவா் ஆலோசனை, அன்னப் பிளவு அறுவை சிகிச்சைக்கான ஆலோசனை, முதலமைச்சா் காப்பீடு திட்டத்திற்கு அறுவை சிகிச்சைக்கான பதிவு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன..
முகாமில் 75- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.
முகாமில் திருத்தணி அரசு பொது மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவா் வெங்கடேசன், மருத்துவா்கள் மோகன்குமாா், ஷேக்முகமது, கீா்த்தனா, ரமேஷ் உள்பட 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனா்.