பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.32,716 கோடி முதலீடு
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர்கள் ரூ.32,716 கோடியை முதலீடு செய்துள்ளனர்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர்கள் ரூ.32,716 கோடியை முதலீடு செய்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2017-18 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் ஈர்த்த முதலீடு ரூ.28,332 கோடியாக இருந்தது.
பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களின் பயனாக, சிறிய நகரங்களில் உள்ள சில்லறை முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்கு சார்ந்த திட்டங்களை தேர்ந்தெடுத்ததையடுத்து நடப்பு நிதி ஆண்டின் இதே கால அளவில் அத்தைகைய திட்டங்கள் ஈர்த்த முதலீடு 15 சதவீதம் அதிகரித்து ரூ.32,716 கோடியை தொட்டுள்ளது. குறிப்பாக, ஏப்ரலில் ரூ.12,409 கோடியும், மே மாதத்தில் ரூ.12,070 கோடியும், ஜூன் மாதத்தில் ரூ.8,237 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், எஸ்ஐபி எனப்படும் முறையான முதலீட்டு திட்டங்களில் பங்கெடுப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததையடுத்தும் அதில் மேற்கொள்ளப்படும் முதலீடு ரூ.7,300 கோடியை எட்டியுள்ளது.
முதலீட்டு வரத்து அதிகரித்ததையடுத்து பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்கு சார்ந்த திட்டங்களில் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சென்ற ஜூன் மாத இறுதி நிலவரப்படி ரூ.7.86 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டைவிட இது 33 சதவீதம் அதிகம் என பரஸ்பர நிதியங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.