சென்செக்ஸ்: 2 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி!
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து இரண்டு நாள் தொடர் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து இரண்டு நாள் தொடர் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
உள்நாட்டிலும், உலகளாவிய சந்தைகளிலும் நேர்மறை குறிப்புகள் ஏதும் இல்லாத நிலையில், வர்த்தகம் ஏற்றம் இறக்கத்தில் இருந்தது. மேலும், ரிசர்வ் வங்கி தனது பணக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தை ஒத்திவைத்ததைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
1,181 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 2,790 பங்குகளில் 1,181 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,434 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 175 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வர்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.11 ஆயிரம் கோடி குறைந்து ரூ.155 லட்சம் கோடியாக இருந்தது.
ஏற்றம், இறக்கம்: சென்செக்ஸ் காலையில் 195.23 புள்ளிகள் கூடுதலுடன் 38,176.86-இல் தொடங்கி அதிகபட்சமாக 38,235.94 வரை உயர்ந்தது. பின்னர் 37,831.35 வரை கீழே சென்றது. இறுதியில் 8.41 புள்ளிகள் (0.02 சதவீதம்) குறைந்து 37,973.22-இல் நிலைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 679 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 924 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 5.15 புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைந்து 11,222.40-இல் நிலைபெற்றது.