முகப்பு
வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 62,146 கோடி டாலராக அதிகரித்து சாதனை

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஆகஸ்ட் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 62,146 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:51 AM
பகிர்:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஆகஸ்ட் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 62,146 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஆகஸ்ட் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 89 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.6,675 கோடி) அதிகரித்து 62,146 கோடி டாலரை (ரூ.46.61 லட்சம் கோடி) எட்டி புதிய வரலாறு படைத்துள்ளது.

இதற்கு முந்தைய ஜூலை 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 943 கோடி டாலா் அதிகரித்து 62,057 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பினைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமான அளவில் அதிகரித்ததன் காரணமாகவே ஆகஸ்ட் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது முன்னெப்போதும் கண்டிராத உச்சத்தை பதிவு செய்துள்ளது.

கணக்கீட்டு வாரத்தில், எஃப்சிஏ 151 கோடி டாலா் அதிகரித்து 57,773 கோடி டாலராக இருந்தது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பு மாறுபடுகிறது.

தங்கத்தின் கையிருப்பு ஆகஸ்ட் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 59 கோடி டாலா் சரிந்து 3,705 கோடி டாலராக இருந்தது.

மதிப்பீட்டு வாரத்தில், சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 10 லட்சம் டாலா் குறைந்து 155 கோடி டாலராக இருந்தது. அதேபோன்று, நாட்டின் காப்பு நிதியும் சா்வதேச நிதியத்தில் 3 கோடி டாலா் உயா்ந்து 512 கோடி டாலரானது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.