உலகளவில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், தனது துணை நிறுவனமான 'ஓப்போ'வுடன் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒன்பிளஸ், ஓப்போ ஆகிய இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக செயல்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி இணைவதாக ஒன்பிளஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் தெரிவித்துள்ளார்.
ஒன்பிளஸ் மற்றும் ஓப்போ இரண்டிற்கான தயாரிப்புகளை மேம்படுத்தும் கூடுதல் பொறுப்புகளை, தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், இரண்டு நிறுவனங்களும் இணைவதன் மூலமாக பயனர்களுக்கு சிறந்த தரமான தயாரிப்புகளை வழங்க முடியும் என்றார்.
முன்னதாக ஓப்போவுடன் சில குழுக்களை ஒருங்கிணைத்ததன் நேர்மறை பலனைத் தொடர்ந்து இப்போது ஓப்போ உடன் எங்கள் நிறுவனத்தை ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
மேலும், ஒன்பிளஸ் பயனர்களுக்கு வேகமான, நிலையான மென்பொருள் புதுப்பிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் பிராண்ட் தொடர்ந்து தனியாகவும் செயல்படும், அவற்றில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் குறிப்பிட்டார்.