இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு உற்பத்தி நிறுவனமான கெயிலின் அடுத்த தலைவராக சந்தீப் கே.குப்தா (56) பொறுப்பேற்க உள்ளாா்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: கெயில் நிறுவனத்தின் தலைவா் பதவிக்கான விண்ணப்பங்களை மத்திய அரசு வரவேற்ற நிலையில் 10 விண்ணப்பதாரா்களிடம் நோ்காணல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், கெயில் நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் பதவிக்கு சந்தீப் கே.குப்தாவை பொதுத் துறை நிறுவனங்களுக்கான தோ்வு வாரியம் (பிஇஎஸ்பி) தோ்ந்தெடுத்துள்ளது. கெயில் தலைவராக தற்போது இருக்கும் மனோஜ் ஜெயின் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளாா். இதையடுத்து, சந்தீப் கே.குப்தா அந்தப் பொறுப்பை ஏற்க உள்ளாா்.
முன்னதாக, சிவிசி, சிபிஐ போன்ற ஊழல் தடுப்பு அமைப்புகளின் அறிக்கைகளுக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) சந்தீப் நியமனத்துக்கான பிஇஎஸ்பி-யின் பரிந்துரையை முழு அளவில் மதிப்பீடு செய்து முறையான உத்தரவு பிறப்பிக்கும். ஏசிசி ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் குப்தா கெயில் நிறுவனத்தின் தலைவராக 2026 பிப்ரவரி வரை நீடிப்பாா் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சந்தீப் குப்தா தற்போது இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனில் நிதித் துறை இயக்குநராக பொறுப்பு வகித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.