இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 184 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 46.70 புள்ளிகள் (0.26 சதவீதம்) குறைந்து 17,660.15-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. ரியால்ட்டி, ஃபார்மா ஹெல்த்கேர், மெட்டல், ஐடி மற்றும் டெக் நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தாலும், வங்கி, மின்துறை, எஃப்எம்சிஜி நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன. மேலும், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விற்பனையை எதிர்கொண்டதால் சந்தை இரண்டாவது நாளாக சரிவில் முடிவடைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.265.95 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்களன்று ரூ.533.20 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 80.51 புள்ளிகள் கூடுதலுடன் 59,991.26-இல் தொடங்கி அதிகபட்சமாக 60,113.47 வரை உயர்ந்தது. பின்னர், 59,579.30 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 183.74 புள்ளிகள் (0.31 சதவீதம்) குறைந்து 59,727.01-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 13 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலிலும் இருந்தன.இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பட்டியலில் மொத்தமுள்ள 50 பங்குகளில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 29 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.