கோல் இந்தியா உற்பத்தி 12% சரிவு
அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 11.9 சதவீதம் குறைந்துள்ளது.
புது தில்லி: அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 11.9 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்டில் நிறுவனத்தின் உற்பத்தி 4.61 கோடி டன்னாக உள்ளது. முந்தைய 2023 ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 11.9 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனத்தின் உற்பத்தி 5.23 கோடி டன்னாக இருந்தது.
எனினும், 2023-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 28.15 கோடி டன்னாக இருந்த நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி நடப்பாண்டின் அதே காலகட்டத்தில் 29.04 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்டில் நிறுவனத்தின் நிலக்கரி விநியோகம் 5.91 கோடி டன்னிலிருந்து 5.21 கோடி டன்னாகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பை கோல் இந்தியா வழங்குவது குறிப்பிடத்தக்கது.