அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு மத்தியில் பொறியியல் ஏற்றுமதி 23.7% உயர்வு!
டிரம்ப்பின் 50% வரி விதிப்புக்கு மத்தியில் பொறியியல் ஏற்றுமதி 23.7% உயர்வு!
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு மத்தியில், இந்தியாவின் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி நவம்பரில் 23.7 சதவீதம் உயர்ந்துள்ளது.
அக்டோபரில் சரிவைக் கண்ட பொறியியல் பொருள்களின் ஏற்றுமதியின் ஆண்டாண்டுக்கான வளர்ச்சி நவம்பரில் 23.7 சதவீதம் உயர்ந்து சுமார் 11.01 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியதாக தொழில் துறை குழுவான இஇபிசி திங்கள்கிழமை(டிச. 15) தெரிவித்துள்ளது. இதே ஏற்றுமதி, கடந்தாண்டு நவம்பரில் 8.9 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலகட்டத்தில், பொறியியல் ஏற்றுமதியின் ஆண்டாண்டுக்கான வளர்ச்சி 4.25 சதவீதம் உயர்ந்து 79.74 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக இஇபிசி இந்தியா தலைவர் பங்கஜ் சாதா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடும்போது, டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் விதித்துள்ள 50 சதவீத வரி இந்தியாவின் ஏற்றுமதி துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதற்கு மத்தியில் பொறியியல் ஏற்றுமதி மீண்டிருப்பதாகவும், நவம்பரில் ஏற்றுமதியின் செயல்பாடு ஊக்குவிப்பதாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.