எண்ம முறையில் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளும்போது, ஒருவேளை, பணப்பரிமாற்றம் முழுமையடையாவிட்டால், உடனடியாக, பணப்பரிமாற்றம் மேற்கொண்டவரின் வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும்.
யுபிஐ மூலம் பெரும்பாலான பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளும் மக்களின் நலன் கருதி இந்த மிக முக்கியமான மாற்றம் ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
தேசிய பணப்பரிவர்த்தனை வாரியம் கொண்டு வந்திருக்கும் இந்த நடைமுறைப்படி, ஒருவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, ஆனால், மற்றவரின் வங்கிக் கணக்குக்குச் சென்று சேராவிட்டால், உடனடியாக எடுத்தவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.
இதுநாள்வரை, 36 மணி நேரம் முதல் ஏழு நாள்கள் என்று ஒவ்வொரு விதமான பணப்பரிமாற்றத்துக்கும், எடுத்தத் தொகை திரும்ப வர கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தொல்லை இனி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழி பிறக்கிறது!
இது மட்டுமல்ல, ஒருவர், தவறான யுபிஐ எண்ணுக்கு பணத்தை செலுத்திவிட்டால், பணத்தைப் பெற்றவரின் வங்கியைத் தொடர்புகொண்டு ஒருவர் தான் தவறாக அனுப்பிய பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளும் வசதியும் வருகிறது.
இது மட்டுமல்லாமல், யுபிஐ பணப்பரிவர்த்தனைகளில் இன்னும் சில மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவரை யுபிஐ பணப்பரிமாற்றம் 30 வினாடிகளில் முழுமையடையும். இனி, அது 10 - 15 வினாடிகளாகக் குறைகிறது. இந்த நடைமுறை ஜூன் மாதமே கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பணப்பரிமாற்றம் நடந்து முடிந்தால் அல்லது தோல்வி அடைந்தால், 30 வினாடிகளுக்குப் பிறகே, பயனர் அதனை உறுதி செய்துகொள்ள முடியும். தங்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதா? அல்லது திரும்பப் பெறப்பட்டிருக்கிறதா? என்பதையும் அப்போதுதான் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த நடைமுறையும் 10 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் 10 வினாடிகளில் அது தெரியவரும் வகையில், அனைத்து யுபிஐ தளங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேறென்ன மாற்றங்கள் ஜூலையில்?
பான் கார்டுக்கு ஆதார் அவசியம்
2025, ஜூலை 1ஆம் தேதி முதல், பான் கார்டு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணை வழங்க வேண்டும். இதுவரை வேறு எந்த அடையாளச் சான்றையும் அளித்து பான் அட்டை பெறும் வசதி இருந்தது.
தட்கல் டிக்கெட்
ஐஆர்சிடிசி செயலியில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஜூலை 1 முதல் ஆதார் மூலம் உறுதிப்படுத்தும் நடைமுறை அமலுக்கு வருகிறது.
ஜூலை 15 முதல், ரயில்வே கவுண்டர்களிலும் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் ஓடிபி உறுதிப்படுத்தும் நடைமுறை அமலுக்கு வரவிருக்கிறது.
ஜிஎஸ்டி தாக்கல்
ஜிஎஸ்டி திரும்பப் பெறுவதற்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் ஜூலை முதல் திருத்தம் மேற்கொள்ள முடியாததாக மாறுகிறது.
இதையும் படிக்க.. சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.