வழக்கமான பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: மத்திய அரசு
ப்ரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு: மத்திய அரசு
பெட்ரோல், டீசல் விலையேற்றம் இல்லை என்று மத்திய அரசு புதன்கிழமை(ஏப். 1) அறிவித்தது. ப்ரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் வழக்கமான பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதே நிலையில், தில்லி சந்தை நிலவரப்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 94.77 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ. 87.67 ஆகவும் விலை மாற்றமின்றி தொடருகிறது. கடந்த ஒரு மாதத்தில், உலகளாவிய பெட்ரோலிய விலை 100 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன.
ப்ரீமியம் பெட்ரோலிய வகைகளான எக்ஸ்.பி. 95, பவர் 95, ஸ்பீடு ஆகிய ஆக்டேன் உயர் செயல்திறன் எரிபொருள்களின் விலை சீராய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விற்பனை மொத்த விற்பனைக் கொள்ளளவில் 2 மற்றும் 5 சதவீதம் மட்டுமே. அவற்றை வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே தேர்வு செய்து பயன்படுத்துகின்றனர்.
உலகெங்கிலும் நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை 30 - 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளபோதிலும், இந்தியாவில் ஒவ்வொரு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களிலும் வழக்கமான பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.