பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்பு
நயாரா பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது பற்றி...
நாடு முழுவதுமுள்ள நயாரா நிறுவன பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப் படைகள் இடையே நடைபெறும் போரால் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. முன்பைவிட பெட்ரோல், டீசல் வரத்து குறைவாக இருப்பதாகவே கூறப்படுகிறது.
எனினும் நாட்டில் போதிய பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு இருப்பு உள்ளது என்று மத்திய அரசு கூறி வருகிறது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை மற்றும் விலை ஏற்றம் காரணமாக இந்தியாவில் முன்னணி எரிவாயு நிறுவனங்களில் ஒன்றான நயாரா நிறுவனம், பெட்ரோல், டீசல் விலையைஉயர்த்தியுள்ளது .
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5.30 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ. 107.93 -க்கும் விற்பனையாகிறது.
அதேபோல டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ. 97.22 -க்கு விற்பனையாகிறது.
இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் இதுவரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. எனினும் நயாராவைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
கடந்த மார்ச் 20 ஆம் தேதி ப்ரீமியம் பெட்ரோல் விலை மட்டும் ரூ.2 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.