இந்திய ரூபாயின் மதிப்பு 92.81 ஆக உயர்வு! 12 ஆண்டுகளில் இல்லாத எழுச்சி! எப்படி?
இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது பற்றி...
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கணிசமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது. ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர், பங்குச்சந்தை வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வந்தது.
இந்நிலையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, அந்நியச் செலாவணி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
அதன்படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 188பைசா(2%) உயர்ந்து 92.81 ஆக உயர்ந்தது. வர்த்தக நேர முடிவில் 156 பைசா உயர்ந்து 93.14 ஆக உள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடையும்பட்சத்தில் அதனை சரிசெய்ய ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும். கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது சுமார் 12.5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரிசர்வ் வங்கி ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
வங்கிகளின் அந்நியச் செலாவணி இருப்பை 100 மில்லியன் டாலராகக் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் ஊகத்தின் அடிப்படையில் நடக்கும் வணிகம் குறையும்.
அதேபோல ஊக வணிகங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரூபாயின் மீதான என்டிஎஃப் ஒப்பந்தங்கள் வழங்குவது, அவற்றை புதுப்பிப்பது நிறுத்திவைக்கப்படுகிறது. அது தொடர்புடைய அந்நியச் செலவாணி ஒப்பந்தங்களும் நிறுத்தி வைக்கப்படுவதுடன் வணிகத்தில் நம்பகமான முதலீடு / காப்பீடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
முன்னதாக அதிகபட்சமாக இந்திய ரூபாயின் மதிப்பு 95.21 என்ற வரலாற்றுச் சரிவை எட்டியிருந்த நிலையில் 100-யை எட்டும் என்று பல்வேறு கணிப்புகள் வந்த நிலையில் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.