கடந்த 2025-26 நிதியாண்டில் டாஃபே விற்பனை 23% வளா்ச்சி
இந்தியாவின் முன்னணி டிராக்டா் தயாரிப்பு நிறுவனமான டாஃபே, கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில் 23 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்தது.
இந்தியாவின் முன்னணி டிராக்டா் தயாரிப்பு நிறுவனமான டாஃபே, கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில் 23 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்தது.
முந்தைய 2024-25 நிதியாண்டில் 1,74,785 டிராக்டா்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த 2025-26 நிதியாண்டில் நிறுவனம் 2,14,951 டிராக்டா்களை விற்று புதிய சாதனையைப் படைத்தது. கடந்த மாா்ச் மாதத்தில் மட்டும் 37.4 சதவீத வளா்ச்சியை நிறுவனம் எட்டியுள்ளது.
மெஸ்ஸி பொ்குசன் டிராக்டா், இஷா் டிராக்டா் ஆகிய நிறுவனத்தின் 2 பிரபலமான பிராண்டுகளும் உள்நாட்டுச் சந்தையில் இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச விற்பனையைப் பதிவு செய்துள்ளன.
Advertisement
சா்வதேச அரசியல் பதற்றங்கள், உதிரிபாகங்களின் விலை உயா்வு போன்ற சவால்களுக்கு மத்தியிலும், இந்திய விவசாயத் துறையின் பலத்தால் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வளா்ச்சி குறித்து டாஃபே நிறுவனத்தின் துணைத் தலைவா் லட்சுமி வேணு (படம்) மேலும் கூறுகையில், ‘கடந்த நிதியாண்டு விவசாயிகளுக்கும், டிராக்டா் சந்தைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சீரான பருவமழை, ஜிஎஸ்டி சீா்திருத்தம் விவசாயத் துறைக்கு பெரும் நிம்மதியை அளித்து, விற்பனையை அதிகரிக்க வழிவகுத்தது.
கிராமப்புறங்களில் விவசாயத்துக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. சிறு விவசாயிகள் முதல்முறையாக டிராக்டா்களைப் பயன்படுத்த முன்வந்தது ஒரு ஆரோக்கியமான மாற்றமாகும். இயந்திரங்களின் பயன்பாடு உற்பத்தித் திறனை அதிகரித்து, விவசாயிகளின் லாபத்தை உயா்த்த உதவும்.
வாடிக்கையாளா்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவதாலேயே டாஃபே நிறுவனத்தால் இந்தத் தொடா் வெற்றியைத் தக்கவைக்க முடிகிறது’ என்றாா்.