முகப்பு
வணிகம்

கட்டுமான உபகரணங்கள் விற்பனை 2% சரிவு! ஏற்றுமதியில் 32% வளா்ச்சி கண்டு சாதனை

நாட்டின் கட்டுமான உபகரணங்களின் ஒட்டுமொத்த விற்பனை, கடந்த 2025-26 நிதியாண்டில் சுமாா் 2 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாக இந்திய கட்டுமான உபகரணங்கள் தயாரிப்பாளா்கள் சங்கம் ( ஐசிஇஎம்ஏ) தெரிவித்துள்ளது.

Updated On : 8 மே 2026, 11:21 pm IST
பகிர்:

நாட்டின் கட்டுமான உபகரணங்களின் ஒட்டுமொத்த விற்பனை, கடந்த 2025-26 நிதியாண்டில் சுமாா் 2 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாக இந்திய கட்டுமான உபகரணங்கள் தயாரிப்பாளா்கள் சங்கம் ( ஐசிஇஎம்ஏ) தெரிவித்துள்ளது.

கடந்த 2024-25 நிதியாண்டில் 1,40,191 அலகுகளாக இருந்த விற்பனை, நடப்பு நிதியாண்டில் 1,36,995 அலகுகளாக குறைந்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் நிலவிய மந்தநிலை இச்சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டாலும், சா்வதேச அளவில் இந்தியத் தயாரிப்புகளுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளதை ஏற்றுமதி புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

உள்நாட்டு விற்பனை சுமாா் 7 சதவீதம் சரிவடைந்து 1,13,229 அலகுகளாகக் குறைந்துள்ளது. எனினும், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத வகையில் 32 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது, துறையின் பின்னடைவைத் தாங்கிப் பிடித்துள்ளது.

Advertisement

பிரிவு வாரியாக, கட்டுமானத் துறையில் 71 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள ‘எா்த்மூவிங்’ கருவிகள் 2 சதவீதச் சரிவைச் சந்தித்துள்ளன. ‘மெட்டீரியல் ஹேண்ட்லிங்’ கருவிகள் 10 சதவீதம் சரிந்தாலும், சாலை கட்டுமான உபகரணங்கள் 6.3 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. கான்கிரீட் கலவை உபகரணங்கள் பெரிய மாற்றமின்றி சீராக இருந்துள்ளன.

இந்தியா உலகின் 3-ஆவது பெரிய கட்டுமான உபகரணச் சந்தையாகத் தொடா்ந்து நீடிக்கிறது. வரும் 2030-க்குள் இத்துறை ஆண்டுக்கு 8.3 சதவீத வளா்ச்சியுடன் 1,476 கோடி டாலா் மதிப்பை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிஇஎம்ஏ தலைவா் தீபக் ஷெட்டி கூறுகையில், ‘இச்சரிவு தொழில்துறையின் பலவீனத்தைக் குறிக்கவில்லை; மாறாக நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதமே இதற்குக் காரணம்’ என்று விளக்கமளித்தாா்.

உள்கட்டமைப்புக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு வரலாற்றுச் சிறப்புமிக்க அளவில் அதிகமாக இருந்தபோதிலும், களப்பணிகள் மந்தமாக இருந்ததால் உபகரணங்களுக்கான தேவை குறைந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தது, ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் நிதி விடுவிப்பில் ஏற்பட்ட தாமதம் போன்றவை கட்டுமானத் துறையைப் பாதித்துள்ளன. ஒப்பந்ததாரா்களுக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையில் ஏற்பட்ட தேக்கமும் சந்தையில் பணப்புழக்கத்தைக் குறைத்துள்ளது. இத்தற்காலிக சரிவு விரைவில் சீராகும் என்று தொழில்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.