முகப்பு
வணிகம்

கடந்த 2025 - 26 நிதியாண்டில் 2.96 கோடி வாகனங்கள் விற்பனை: 13.3% வரலாற்று வளா்ச்சி!

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கடந்த 2025-26 நிதியாண்டில் 2,96,71,064 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

Updated On : 6 ஏப்ரல், 2026 at 8:29 PM
வாகனங்கள் - பிரதிப் படம்
பகிர்:

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கடந்த 2025-26 நிதியாண்டில் 2,96,71,064 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

முந்தைய 2024-25 நிதியண்டில் 2,61,87,255 வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில், கடந்த 2025-26 நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 13.3 சதவீத விற்பனை வளா்ச்சி பதிவுவாகியுள்ளது.

ஜிஎஸ்டி சீா்திருத்தத்துக்குப் பிறகு சந்தையில் ஏற்பட்ட நோ்மறையான மாற்றங்கள், இந்த இமாலய வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக இந்திய வாகன டீலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) தெரிவித்துள்ளது.

Advertisement

பயணிகள் வாகனப் பிரிவில் மட்டும் கடந்த நிதியாண்டில் 47,05,056 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது முந்தைய ஆண்டின் விற்பனையான 41,63,927 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகமாகும்.

இதேபோல், இருசக்கர வாகன விற்பனை 13.4 சதவீதம் வளா்ச்சியடைந்து 2,14,20,386 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் முறையே 11.68 சதவீதம் மற்றும் 11.74 வளா்ச்சியைப் பதிவு செய்து, வாகனச் சந்தையின் அனைத்துப் பிரிவுகளும் ஆரோக்கியமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.

இது குறித்து ஃபடா தலைவா் சி.எஸ்.விக்னேஷ்வா் கூறுகையில், ‘இந்திய வாகனத் துறைக்கு கடந்த நிதியாண்டு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாகும். 3 கோடி என்ற இலக்கை நாம் நெருங்கி வருகிறோம்.

முதல் 5 மாதங்கள் மந்தமான வளா்ச்சியைச் சந்தித்தாலும், செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி சீா்திருத்தம் திருப்புமுனையாக அமைந்தது. எளிய மக்களுக்கான வரிச் சுமை குறைந்ததால், நுகா்வோரின் வாங்கும் திறன் அதிகரித்து விற்பனை சூடுபிடித்தது.

இதைத் தொடா்ந்து, அக்டோபரில் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் ஒரே மாதத்தில் வந்ததையடுத்து, அந்த மாத விற்பனை முதல்முறையாக 40 லட்சத்தைக் கடந்தது. இந்த வேகம் மாா்ச் வரையிலும் நீடித்தது. நகா்ப்புறம் மட்டுமின்றி ஊரகப் பகுதிகளிலும் வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததும் இந்த வளா்ச்சியை உறுதிப்படுத்தின’ என்றாா்.

தற்போதைய விற்பனை உற்சாகமளிப்பதாக இருந்தாலும், மத்திய கிழக்கு போா்ச் சூழல் மற்றும் அதன் காரணமாக எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஃபடா கவலை தெரிவித்துள்ளது.

‘நிதி நிறுவனங்களின் கடன் வழங்கும் முறையில் பெரிய மாற்றங்கள் இல்லாதது சந்தைக்குச் சாதகமான அம்சமாகும். இருப்பினும், புவிசாா் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, வரும் மாதங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்’ என ஃபடா அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments