போர்நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி 4% உயர்வு!
சென்செக்ஸ் 2,946.32 புள்ளிகள் உயர்ந்து 77,562.90 ஆகவும், நிஃப்டி 873.70 புள்ளிகள் உயர்ந்து 23,997.35 ஆக நிலைபெற்றது.
மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் உலகளாவில் பதற்றம் வெகுவாக தணிந்த நிலையில், இந்தியப் பங்குச் சந்தை, இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து 5வது நாளாக ஏற்றம் கண்டது.
பல்வேறு துறைகளில் ஏற்பட்ட பரவலான கொள்முதலை தொடர்ந்து, பங்குச் சந்தை வலுவான நிலையில் தொடங்கி, வர்த்தக நேரம் முழுவதும் இந்த உயர்வை தக்க வைத்துக் கொண்டது. முக்கிய குறியீடுகள் 4 சதவீதம் உயர்ந்த நிலையில், மே 2025-க்குப் பிறகு, அதிக செயல்திறன் கொண்ட நாளாக இன்று பதிவானது. அதே வேளையில், நிஃப்டி 24,000 புள்ளிகளைக் கடந்தது இன்று சாதனை படைத்தது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 2,946.32 புள்ளிகள் உயர்ந்து 77,562.90 ஆகவும், நிஃப்டி 873.70 புள்ளிகள் உயர்ந்து 23,997.35 ஆக நிலைபெற்றது. நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 4% உயர்ந்தன.
Advertisement
மும்பை பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம், இன்றைய நிலவரப்படி ரூ. 429.26 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 16 லட்சம் கோடிக்கும் மேல் அதிகரித்து ரூ. 445.57 லட்சம் கோடியாக உள்ளது.
நிலவிவரும் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியிலும், நடுநிலையான நிலைப்பாட்டை கடைப்பிடித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. அதன் ரெப்போ வட்டி விகிதத்தை 5.25% என்ற அளவில் மாற்றமின்றி வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி, 2027 நிதியாண்டிற்கான வளர்ச்சியை 6.9 சதவீதமாகக் கணித்துள்ளது. இருப்பினும், 2027 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, முன்னர் கணிக்கப்பட்ட 6.9 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாகவும், 2வது காலாண்டிற்கான வளர்ச்சி 7 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்கம் 4.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 2027 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான வளர்ச்சி, முன்னர் கணிக்கப்பட்ட 4 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகவும், 2வது காலாண்டிற்கான கணிப்பு 4.2 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
சென்செக்ஸில் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் 8.22 சதவீதம் உயர்ந்து அதிகபட்ச வளர்ச்சியை கண்டது. லார்சன் & டூப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி மற்றும் மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன மறுபுறம் டெக் மஹிந்திரா, சன் பார்மா மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ், இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் கோல் இந்தியா, டெக் மஹிந்திரா, நெஸ்லே இந்தியா, விப்ரோ, ஓஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
அனைத்து குறியீடுகளும் ஏற்றத்துடன் இன்று முடிவடைந்தன. ஆட்டோ மற்றும் ரியல்டி 6 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தன. அதே நேரத்தில், நுகர்வோர் பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, தொலைத்தொடர்பு, உள்கட்டமைப்பு, பொதுத்துறை வங்கி, தனியார் உள்ளிட்ட குறியீடுகள் தலா 3 முதல் 5 சதவீதம் வரை உயர்ந்தன.
வலுவான 4வது காலாண்டு வணிக அறிக்கையைத் தொடர்ந்து டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் 6% உயர்ந்தன. எல்.ஐ.சி வாரியம் போனஸ் பங்குகளை வழங்குவது குறித்து பரிசீலிக்க உள்ளதால், அதன் பங்குகள் கிட்டத்தட்ட 7% உயர்ந்தன. ஸ்வான் டிஃபென்ஸ் அண்ட் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ரூ.1,500 முதல் 3,000 கோடி மதிப்பிலான புதிய ஆர்டரைப் கையகப்படுத்தியதால் அதன் பங்குகள் 5% உயர்ந்தன.
ஆசியப் பங்குச் சந்தைகளில், தென் கொரியாவின் முக்கியக் குறியீடான கோஸ்பி 6.87 சதவீதமும், ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு 5.39 சதவீதமும் உயர்ந்தன. ஷாங்காய் சந்தையின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடும், ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடும் கணிசமாக உயர்ந்தன. ஐரோப்பியப் பங்குச் சந்தையும் கணிசமான உயர்ந்தன.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கப் பங்குச் சந்தைகள் எவ்வித மாற்றமுமின்றி சமமாக நிறைவடைந்தன.
தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 8,692.11 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 7,979.50 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் எண்ணெய் விலை, 13.89 சதவீதம் சரிந்து பேரல் ஒன்றுக்கு 94.09 அமெரிக்க டாலராக உள்ளது.