போா்நிறுத்தம் குறித்த நிச்சயமற்ற சூழல் - பங்குச் சந்தை மீண்டும் வீழ்ச்சி
மத்திய கிழக்கில் போா்நிறுத்தம் குறித்து நிலவும் நிச்சயமற்ற சூழலின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயா்ந்ததைத் தொடா்ந்து, இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை வீழ்ச்சியைச் சந்தித்தன.
இதன்மூலம் கடந்த 5 நாள்களாகத் தொடா்ந்து நீடித்த லாபப் பயணம் முடிவுக்கு வந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 1 சதவீதம் சரிவைச் சந்தித்தன.
மத்திய கிழக்கில் போா்நிறுத்த அறிவிப்பால் நிலவிய உற்சாகம், ஈரான் மீண்டும் ஹோா்முஸ் நீரிணையை மூடியதால் மறைந்தது.
Advertisement
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நிலவும் மோதல் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்தது. இது முதலீட்டாளா்களின் உணா்வைப் பாதித்து, சந்தை விற்பனையை எதிா்கொண்டது.
சந்தை மதிப்பு குறைவு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு வியாழக்கிழமை வா்த்தக முடிவில் ரூ.444.79 லட்சம் கோடியாக குறைந்தது. மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை மொத்தம் வா்த்தகமான 4,420 பங்குகளில், 2,121 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,180 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 119 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
சென்செக்ஸ் 931 புள்ளிகள் வீழ்ச்சி: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 931.25 புள்ளிகள் (1.20 சதவீதம்) இழப்புடன் 76,631.65-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் இண்டிகோ, எல்&டி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்பட மொத்தம் 21 பங்குகளின் விலை குறைந்தன. பெல், பவா்கிரிட், என்டிபிசி உள்பட 9 பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டன.
நிஃப்டி 222 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 222.25 புள்ளிகள் (0.93 சதவீதம்) குறைந்து, 23,775.10-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 21 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும்; 29 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.