தங்கம் வாங்குவது, தங்கம் அணிவது, வீட்டில் சேமிப்பது என்பது இந்தியாவில் கொண்டாடப்படும் பழக்க வழக்கங்களில் ஒன்று. கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்து ஒரு முடிவு இல்லாமல் நீண்டுகொண்டிருக்கிறது.
ஆரம்ப காலத்திலேயே, தங்க நகைகள் என்பது பெண்களின் அழகுக்காக அணிவதாக இல்லாமல், அது அவர்களின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்பட்டது. காலம் மாறி, பெண்கள் விதவிதமான நகைகளை வாங்கி அணிந்து அழகுப்படுத்திக் கொண்டார்கள். ஆனால், எப்போதும் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகவே இருக்கிறது. அதுவும் வீட்டில் உள்ள பெண்களிடம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.
இப்படித்தான், ஒட்டுமொத்த உலக நாடுகளின் தங்க கையிருப்பில், இந்திய பெண்களிடம் இருப்பது மட்டும் 11 சதவிகித தங்கம் என்கின்றன தரவுகள்.
அதாவது, உலக தங்க கவுன்சிலின் அறிக்கை வெளியிட்ட தகவலில், இந்தியப் பெண்களிடம் கிட்டத்தட்ட 24 ஆயிரம் டன் தங்கம் கையிருப்பில் உள்ளதாம். இது உலகம் முழுவதும் உள்ள தங்கக் கையிருப்பில் 11 சதவீதம். அதுவும் தங்க நகையாக.
இதைவிட சுவாரசிய தகவல் ஒன்றும் உள்ளது, அதாவது, உலகளவில், அதிகம் தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் முதல் 5 நாடுகளின் மொத்த தங்க கையிருப்பைக் காட்டிலும், ஒட்டுமொத்த இந்திய பெண்களிடம் இருக்கும் தங்க நகை அதிகம். அமெரிக்காவிடம் 8 ஆயிரம் டன்னும் ஜெர்மனியிடம் 3,300 டன்னும் இத்தாலி 2450 டன், பிரான்ஸ் 2400 டன், ரஷியா 1900 டன் தங்கம் கையிருப்பில் வைத்திருக்கிறது என்றால் இந்திய பெண்கள் வைத்திருப்பதோ 24 ஆயிரம் என்று மலைக்க வைக்கிறது புள்ளி விவரம்.
இவ்வளவு தங்கம் வைத்திருக்கிறோமே, இது சட்டப்படி சரியா? ஒருவர் வீட்டில் சட்டப்படி எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்று ஏதேனும் வரையறை உள்ளதா? என்பது நீண்டநாள்களாக மக்களிடையே எழும் கேள்வி.
அதாவது, வருமான வரித்துறை என்பது, ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கிறார் என்பது பற்றி கேள்வி எழுப்புவதில்லை. ஆனால், அந்த தங்கம் வாங்கியது எப்படி, அதற்கான வருமானம் எங்கிருந்து வந்தது, பாரம்பரிய நகையாக இருந்தால், அதற்கான ஆதாரம் போன்றவைதான்.
ஒரு திருமணமான பெண் என்றால் அதிகபட்சம் 500 கிராம் வரை தங்க நகைகள் வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரை தங்கம் வாங்கி வைத்திருக்கலாம். ஆண்களாக இருந்தால் அதிகபட்சம் 100 கிராம் வரை தங்கம் வாங்கி கையிருப்பில் வைத்திருக்கலாம்.
இப்படி என்றால், ஒரு திருமணமாகாத மகளைக் கொண்டிருக்கும் சிறிய குடும்பத்தில் அதிகபட்சம் 850 கிராம் தங்கம் வைத்திருக்கலாம் என்கின்றன கணக்குகள். இவையும் ஒரு தோராய மதிப்புதான். ஒருவர் வீட்டில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு, அவர்களது வருமானத்துக்கு ஏற்றதாக இருக்கும்பட்சத்தில் எந்த சிக்கலும் இல்லை.
இதற்கும் மேல் தங்கம் வாங்கி வைத்துக் கொள்வது சட்டப்படி விரோதம் அல்ல என்றாலும், அதற்கான வருமானத்தை கணக்கில் காட்ட வேண்டும். அதுதான் சட்டப்படி சரியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.