ஐடி பங்குகளின் வீழ்ச்சியால் பங்குச் சந்தைகள் இன்று(பிப். 12) கடும் சரிவுடன் வர்த்தகமாகியுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,968.43 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலையில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை குறைந்தது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 558.72 புள்ளிகள் (0.66 சதவீதம்) குறைந்து 83,674.92 புள்ளிகளில் நிறைவு பெற்றது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 146.65 புள்ளிகள்(0.57 சதவீதம்) குறைந்து 25,807.20 புள்ளிகளில் நிலை பெற்றது.
இதுவரை இல்லாத அளவுக்கு நிஃப்டி ஐடி பங்குகள் 5.51% சரிவைச் சந்தித்துள்ளன. ரியல் எஸ்டேட் குறியீடு 1.45 சதவீதமும் ஆயில் & கேஸ் குறியீடு 1.19 சதவீதமும் சரிந்தன. அதேநேரத்தில் நிதி சேவைகள் குறியீடு 0.38 சதவீதம் உயர்ந்தது.
சென்செக்ஸ் பங்குகளில் டெக் மஹிந்திரா (6%), இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்சிஎல் டெக், மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிக இழப்பைச் சந்தித்தன. அதேநேரத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பிஇஎல்), டிரென்ட் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக இருந்தன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.47 சதவீதமும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.64 சதவீதமும் சரிந்தது. இன்று ரூ. 2.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 90.59 ஆக உள்ளது.
ஐடி பங்குகள் சரிவு, ஏன்?
அமெரிக்க செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஆந்தோரோபிக்கின் புதிய ஏஐ தொழில்நுட்ப அறிமுகத்தால் ஐடி துறையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற ஏஐ தொழில்நுட்பங்களைவிட ஆந்தோரோபிக்கின் புதிய ஏஐ துல்லியமாக வேலையைச் செய்து முடிப்பதாகக் கூறப்படுகிறது.
ஐடி துறையில் பெரும்பாலான அவுட்சோர்சிங் வேலைகளை இந்த ஏஐ சிறப்பாக செய்து முடிப்பதால் அந்த வேலைகளுக்கு ஊழியர்கள் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற முன்னணி ஐடி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.