பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,500, நிஃப்டி 500 புள்ளிகள் உயர்வு! ரூ. 10 லட்சம் கோடி லாபம்!!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...
இஸ்ரேல் - ஈரான் போரினால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவைச் சந்தித்து வந்த நிலையில், அதிபர் டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.
நேற்றைத் தொடர்ந்து இன்றும்(மார்ச் 25) பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
காலை 11.50 மணியளவில் சென்செக்ஸ் 1,593.77 புள்ளிகள் உயர்ந்து 75,662.22 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 496.85 புள்ளிகள் உயர்ந்து 23,409.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி50 குறியீட்டில் டெக் மஹிந்திராவைத் தவிர மற்ற 49 நிறுவனங்களும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஸ்ரீராம் ஃபைனான்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், ட்ரெண்ட் ஆகியவை அதிக லாபம் பெற்ற நிறுவனங்களாக உள்ளன.
இன்று தற்போது வரை ரூ. 10 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைத்துள்ளது.
துறைவாரியாக, நிஃப்டி ரியல் எஸ்டேட் குறியீடு 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து சிறப்பாக வர்த்தகமாகிறது. நிஃப்டி ஐடி குறியீடு மிக மோசமாகச் செயல்பட்டு வருகிறது.
போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 4.80 சதவீதம் சரிந்து ஒரு பேரலுக்கு 99.47 டாலராக உள்ளது.
காலை வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்து 93.94 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.