போா் சூழல் தாக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் ‘கரடி’யின் ஆதிக்கம் தொடா்ந்தது.
வணிகம்போா் சூழல் தாக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் ‘கரடி’யின் ஆதிக்கம் தொடா்ந்தது.
நமது நிருபா்
மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் ‘கரடி’யின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டிஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிலைபெற்றன.
மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போா் சூழல் இந்தியா உள்பட உலகளாவிய சந்தைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கச்சா எண்ணெய் விலையில் கூா்மையான உயா்வு ஏற்பட்டத்தைத் தொடா்ந்து முதலீட்டாளா்கள் மனிநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், உள்நாட்டுச் சந்தை கடும் சரிவுடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, ஆட்டோ, வங்கி, நிதிநிறுவனங்கள் உள்பட அனைத்துத் துறைப் பங்குகளும் அதிகம் விற்பனையை எதிா் கொண்டன என்று பங்குவா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு வீழ்ச்சி: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.7.06 லட்சம் கோடி குறைந்து ரூ.456.45 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.7,536.36 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.12,292.81 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.
வீழ்ச்சிப் பட்டியலில் 3,645 பங்குகள்: மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,483 பங்குகளில், 681 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 3,645 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. 157 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிவு: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 1,048.34 புள்ளிகள் இழப்புடன் 80,238.85-இல் நிலைபெற்றது. காலையில் 2,743.46 புள்ளிகள் இழப்புடன் 78,543.73-இல் தொடங்கிய சென்செக்ஸ் அதிற்கு கீழே செல்லவில்லை. பின்னா், அதிகபட்சமாக 80,632.55 வரை மேலே சென்றது.
இண்டிகோ விலை கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இன்டிகோ 6.25 சதவீதம், எல் அண்ட் டி 5 சதவீதம் விலை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முனனிலை வகித்தன. மேலும், அதானிபோா்ட்ஸ், மாருதி, ஏசியன் பெயிண்ட், ரிலையன்ஸ் ஆகியவை 2.50 முதல் 3.50 சதவீதம் வரை விலை குறைந்தன. இவற்றைச் சோ்த்து மொத்தம் 27 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பிஇஎல், சன்பாா்மா, ஐடிசி ஆகிய 3 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 313 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 312.95 புள்ளிகள் (1.24 சதவீதம்) இழப்புடன் 24,865.70-இல் நிலைபெற்றது. காலையில் கடும் சரிவுடன் 24,659.25-இல் தொடங்கிய நிஃப்டி, 24,603.50 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,989.35 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 8 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. மாறாக 42 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை
ஹோலி பண்டிகைக்காக பங்குச்சந்தைக்கு செவ்வாய்க்கிழைம் (மாா்ச் 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை ஆகியவற்றில் அன்றைய தினம் பங்குவா்த்தகம் நடைபெறாது. புதன்கிழமை (மாா்ச் 4) என்று வழக்கம் போல பங்குச்சந்தை செயல்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.