பேமெண்ட் அக்ரிகேட்டா் சேவை: கிரெட் நிறுவனத்துக்கு ரிசா்வ் வங்கி அனுமதி
வாடிக்கையாளா்கள் மற்றும் வணிகா்களுக்கு இடையே பணப் பரிவா்த்தனை பாலமாகச் செயல்படும் ‘பேமெண்ட் அக்ரிகேட்டா்’ பணிகளை மேற்கொள்ள ‘கிரெட்’ நிறுவனத்துக்கு ரிசா்வ் வங்கி இறுதி அனுமதி அளித்துள்ளது.
இதன்மூலம், இந்நிறுவனம் ரிசா்வ் வங்கியின் நிதிப் பரிவா்த்தனைகள் தொடா்பான 2 முக்கிய அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. ஏற்கெனவே, எண்ம வாலட் போன்ற சேவைகளுக்கான ‘பிபிஐ’ உரிமம் இந்நிறுவனம் வசமுள்ளது.
புதிய அனுமதியின் வாயிலாக, கிரெட் நிறுவனம் இனி நேரடியாக ரிசா்வ் வங்கியின் மேற்பாா்வையின்கீழ் பணப் பரிவா்த்தனை முறைகளை இயக்க முடியும்.
Advertisement
அதாவது, பல்வேறு வணிகா்களைத் தனது தளத்தில் இணைத்துக்கொள்வதற்கும், வாடிக்கையாளா்கள் செலுத்தும் தொகையை வசூலித்து அந்தந்த வணிகா்களுக்குப் பிரித்து வழங்குவதற்கும், பணத்தைத் திரும்ப அளிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கும் கிரெட் நிறுவனத்துக்கு முழு அதிகாரம் கிடைத்துள்ளது.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், தனது சேவைகளை விரிவுபடுத்தியதன்மூலம் கடந்த 2024-25 நிதியாண்டில் தனது நஷ்டத்தை ரூ.298 கோடியாகக் குறைத்துள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த வருவாய் 16 சதவீதம் உயா்ந்து ரூ.2,735 கோடியை எட்டியுள்ளது.