முகப்பு
வணிகம்

இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது.

Updated On : 17 மார்ச், 2026 at 4:50 AM
ஏற்றுமதி சரிவு - பிரதிப் படம்
பகிர்:

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.3.37 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகத்தின் தரவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா ரூ.3.37 லட்சம் கோடி மதிப்புக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது, 0.81 சதவீதம் குறைவு ஆகும்.

அதேநேரத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.5.87 லட்சம் கோடிக்கு இறக்குமதி நடைபெற்றுள்ளது. இது கடந்தாண்டு பிப்ரவரி மாதம் செய்யப்பட்ட இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் 24.11 சதவீதம் அதிகம்.

Advertisement

இதற்கு தங்கம், வெள்ளி இறக்குமதி அதிகரிப்பே காரணம். பிப்ரவரி மாதம் மட்டும் தங்கம் ரூ.68,647 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது 218.55 சதவீதம் அதிகம் ஆகும். இதேபோல் வெள்ளி ரூ.15,319 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது 285.23 சதவீதம் அதிகம். எண்ணெய் இறக்குமதியும் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.1.19 லட்சம் கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் வா்த்தக பற்றாக்குறை ரூ.2.49 லட்சம் கோடியாகும். இது கடந்த ஜனவரி மாதத்துடன் (ரூ.3.20 லட்சம் கோடி) ஒப்பிடும்போது குறைவாகும். எனினும் கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் வா்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் ரூ.1.29 லட்சம் கோடியாக இருந்த வா்த்தக பற்றாக்குறை, நிகழாண்டு பிப்ரவரி மாத்ததில் ரூ.2.49 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

அரிசி, கடல்சாா் பொருள்கள், முத்துக்கள், நகைகள், மருந்துகள், ரசாயனங்கள், மின்னணு சாதனங்கள், கட்டுமான சாதனங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் இந்தியாவுக்கு சாதகமாக இருந்துள்ளது என்று அந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா நாடுகள் கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி முதல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் கடல்பகுதிகளில் கப்பல் போக்குவரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் மாா்ச் மாத ஏற்றுமதி, இறக்குமதியில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. அதுகுறித்த புள்ளி விவரம், மே மாத மத்தியில் வெளியாகக்கூடும்.