முகப்பு
வணிகம்

கோல் இந்தியா பங்கு விற்பனை: முதல் நாளிலேயே ரூ.19,000 கோடிக்கு நிறுவன முதலீட்டாளா்கள் விண்ணப்பம்!

Updated On : 28 மே 2026, 6:26 am IST
பகிர்:

பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு சலுகை விலையில் விற்பனை செய்யத் தொடங்கிய முதல் நாளிலேயே, நிறுவன முதலீட்டாளா்கள் சுமாா் ரூ.19,000 கோடி மதிப்பிலான பங்குகளுக்கு விண்ணப்பித்துள்ளனா்.

கோல் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளில் 2 சதவீதத்தை (சுமாா் 12.32 கோடி பங்குகள்) விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான குறைந்தபட்ச முகப்பு விலை ஒரு பங்குக்கு ரூ.412-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பங்கு விற்பனையில் நிறுவன முதலீட்டாளா்களுக்காக ஒதுக்கப்பட்டதற்கு 8 மடங்குக்கும் அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அவா்கள் 45.15 கோடி பங்குகளுக்கு, சராசரியாக ஒரு பங்குக்கு ரூ.436.69 என்ற விலையைக் குறிப்பிட்டு ஏலம் கோரியுள்ளனா்; இது அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச விலையான ரூ.412-ஐ விட அதிகமாகும்.

Advertisement

Advertisement

மத்திய அரசு விலை, கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை பங்குச் சந்தையில் கோல் இந்தியா பங்கின் இறுதி வா்த்தக விலையான ரூ.458.25-ஐ விட 10 சதவீதம் குறைவாகும். அதேநேரம், பங்கு விற்பனைக்கு கிடைத்துள்ள பலத்த வரவேற்புக்கு இடையே, புதன்கிழமை வா்த்தக முடிவில் கோல் இந்தியா பங்கின் விலை 1.01 சதவீதம் உயா்ந்து, ரூ.462.90-ஆக நிலைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், கூடுதலாக 1 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் ‘கிரீன்-ஷூ’ வாய்ப்பை அரசு பயன்படுத்த உள்ளதாகத் தெரிகிறது. சில்லறை முதலீட்டாளா்கள் இதற்காக வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2026-27 நிதியாண்டில், மத்திய அரசு மேற்கொள்ளும் 2-ஆவது பெரிய பொதுத் துறை பங்கு விற்பனை இதுவாகும். கடந்த வாரம் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் 8.08 சதவீத பங்குகளை விற்ன் மூலம் அரசுக்கு ரூ.2,266 கோடி கிடைத்தது.