அனுமதி மறுப்பின் பின்னணி என்ன?
திருநெல்வேலியில் வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நடைபெறவிருந்த "2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் விழிப்புணர்வு' கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. டிசம்பர் 7-13 வரை நடைபெறவிருந்த இந்
திருநெல்வேலியில் வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நடைபெறவிருந்த "2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் விழிப்புணர்வு' கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
டிசம்பர் 7-13 வரை நடைபெறவிருந்த இந்தக் கூட்டத்தில்ம.தி.மு.க. சார்பில் நாஞ்சில் சம்பத், அதிமுக சார்பில் பழ.கருப்பையா, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்திய கம்யூனிஸ்டு மாநிலத் தலைவர் தா.பாண்டியன், பா.ஜ.க.மாநில துணைத் தலைவர் எச்.ராஜா, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி, டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது.
சட்டம்-ஒழுங்கு பிரச்னை, போக்குவரத்து இடையூறு போன்ற காரணங்களைக் காட்டி கூட்டத்துக்கு அனுமதி மறுத்தது காவல் துறை. பள்ளி மைதானத்தில் கூட்டம் நடத்த சாஃப்டர் பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்கிய நிலையில், திமுக தலைமைக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவரே பள்ளியை நிர்வகிக்கும் மறைமாவட்டம் நிர்வாகத்தை மிரட்டியதாகவும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மூலம் பள்ளி நிர்வாகம் எச்சரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
காவல் துறை அனுமதி மறுத்ததையடுத்து, வாக்காளர் விழிப்புணர்வு இயக்கத்தின்தலைவரும், அதிமுக பிரமுகருமான கல்லூர் வேலாயுதம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையை நாடினார். என்ன நெருக்கடியோ தெரியவில்லை, பள்ளி நிர்வாகமும் அனுமதியை ரத்து செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டது.
இருப்பினும் பொது இடங்களில் கூட்டம் நடத்தலாம் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் அதற்கும் காவல் துறையினர் அனுமதி தரவில்லை.
இந்த விவரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டபோது, காவல் துறையினரை நீதிபதி கடிந்து கொண்டதோடு, கூட்டம் நடத்துவது தொடர்பான அனுமதி குறித்த விவரத்தை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இதுபோன்ற கூட்டங்கள் நடப்பது புதிதல்ல. ஏன் திமுக கூட்டங்களேகூட இங்கு நடைபெற்றிருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த அதிமுக பிரமுகர் கல்லூர் வேலாயுதம்.