19. பழகப் பழக வரும் பாண்டித்தியம்
இந்த உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய மனிதன், இப்போதைக்கு உசைன் போல்ட்தான்.
இந்த உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய மனிதன், இப்போதைக்கு உசைன் போல்ட்தான்.
2012 ஒலிம்பிக்கில், நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றவர். 100 மீட்டர் தூரத்தைக் கடக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் 9.58 விநாடிகள்.
அவரால் அப்படி வேகமாக ஓடமுடியும். ஆனால், அவரால் அவர் எப்படி அவ்வாறு ஓடுகிறார் என்று சரியாக விவரிக்க முடியாது.
செய்யமுடிந்து விவரிக்க முடியாதது, டேசிட் நாலெட்ஜ்.
இதென்ன விந்தையாக இருக்கிறதே என்றுதான் எனக்கும் தோன்றியது. யோசித்துப் பார்த்தேன். புதிர் விடுபடுவதுபோல் இருந்தது. எப்படி என்கிறீர்களா?
கற்றலில் நான்கு நிலைகள் இருக்கின்றன. ஓர் எடுத்துக்காட்டு மூலம் பார்க்கலாம்.
பேருந்தில் போகிறபோது, இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்தது. வண்டியை விட்டு இறங்கிய பின்பும் பிரச்னை தொடர்ந்தது. கீழே இறங்கியதும், மீண்டும் இருவரும் அடித்துக்கொண்டார்கள்.
இருவருமே இளைஞர்கள். அதில் ஒருவர் கராத்தே தெரிந்தவர்போல. அவருடைய அடிகள் பலமாகவும் சரியாகவும் இறங்க, அடுத்தவரால் சமாளிக்க முடியவில்லை. அவர் விட்ட குத்துகள் காற்றில்தான் விழுந்தன. அவரால் எதிராளியை அடிக்க முடியவில்லை. ஆனால், நிறைய அடி வாங்கினார். ஒரு கட்டத்தில், அடி தாங்காமல் கீழே விழுந்துவிட்டார். பேருந்து நிறுத்தத்தில் இருந்த சிலர் இருவரையும் விலக்கிவிட்டார்கள்.
அடிகொடுத்தவர், கொஞ்ச தூரம் நடந்திருப்பார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அடிவாங்கியவர் திடீரென எழுந்து ஓடிப்போய், அடித்தவரை எட்டி உதைக்க முயன்றார். ஆனால், அந்த கராத்தே தெரிந்தவரோ, லாகவமாக விலகிக்கொண்டார். தன்னைத் தாக்க வந்தவனின் அடுத்த அடுத்த முயற்சிகளையும் அநாயாசமாகத் தவிர்த்துவிட்டு, ‘போடா, மேலும் உதை வாங்காமல் ஒழுங்காக வீடு போய்ச்சேர்…’ என்பதுபோல் கையசைத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார்.
அடிவாங்கியவர் பெயர் சுரேஷ்; அடித்தவர் பெயர் குமார் (என்று வைத்துக்கொள்வோம்). குமாருக்குக் கராத்தே தெரியும். முறையாகப் பயிற்சி பெற்றிருக்கிறார்.
சுரேஷை வைத்துத்தான் நாம் கற்றலின் நான்கு நிலைகளைப் பார்க்கப்போகிறோம்.
சுரேஷின் ஆரம்ப நிலை என்ன?
சுரேஷுக்கு கராத்தே தெரியாது. தவிர, தனக்கு கராத்தே தெரியாது என்பதும் சுரேஷுக்குத் தெரியாது. அதனால்தான், குமார் அடித்த விதத்தைப்போல் சுரேஷ் முயன்றிருக்கிறார்.
‘குமார் அடித்து உதைத்த விதம் எல்லாம் காரத்தே வகை. அதை நாம் பழகவில்லை. பழகினால்தான் அதைச் சரியாகச் செய்ய முடியும்’ என்பது போன்ற சிந்தனைகள் சுரேஷிடம் இல்லை. அதனால்தான், பேருந்து நிறுத்தத்தில், கீழே விழுந்தபின் எழுந்து, தன்னை அடித்தவன் அடித்த விதத்தில் முயற்சித்தார், தோல்வியுற்றார்.
அவர், குமார்போலச் செய்தது எதுவும் பலிக்கவில்லை. ஏன்?
அவரிடம் கராத்தே திறன் இல்லை. அதை அவர் பழகியிருக்கவில்லை.
சுரேஷ் இருந்த ஆரம்ப நிலை, ‘கராத்தே என்று ஒரு தற்காப்புக் கலை உண்டு; அதைப் பழகினால், அந்தத் திறன் பெற்றால், நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்’ என்பது தெரியாத நிலை.
அந்தத் திறன் இல்லை. தவிர அப்படி ஒரு திறன் உலகில் உண்டு என்பதும் தெரியவில்லை. இது ‘அன்கான்சியஸ் இன்காம்பிடென்ஸ்’ (Unconcious Incompetence) நிலை. திறன் இல்லை என்பதே தெரியாத நிலை.
இதுதான், கற்றலின் ஆரம்ப நிலை. ஸ்டேஜ் 1.
இருவருக்குள்ளும் நடந்த கைகலப்பில், சுரேஷ் அடிக்கும் அடிகள், குமார் மீது சரியாக விழவில்லை. காரணம், குமார் சரியாக நகர்ந்துவிடுகிறார். ஆனால், குமார் அடிக்கும் ஒவ்வொரு அடியும் சுரேஷ் மீது இடியாக இறங்குகின்றன.
சுரேஷின் மனது இப்போது விழிப்புடன் இவற்றைக் கவனிக்கிறது. ‘தனக்குத் தெரியாத ஏதோ ஒரு விதத்தில் எதிரி தாக்குகிறான்’.
பேருந்து நிறுத்தத்தில் மேலும் அடிவாங்கி கீழே விழுந்தபின், திருப்பித் தாக்கத் துடித்த சுரேஷ் மனது அவருக்குச் சொல்லுகிறது – ‘எதிரி ஏதோ விதங்களில் கால்களைத் தூக்கி உதைக்கிறானே. அதேவிதத்தில் நீயும் உதை, அவ்வளவுதான். அவனும் பாதிக்கப்படுவான்’.
மனது சொல்லியபடி சுரேஷ் முயற்சிக்க, அது சரியாக வரவில்லை. காரணம், சுரேஷ் கராத்தே பழகவில்லை. சுரேஷிடம் அந்தத் திறன் இல்லை.
அப்போது அவன் மனது குறித்துக்கொள்ளும். என்னவென்று?
‘ஏதோ ஒரு குறிப்பிட்டவிதமாகத் ‘தடுக்கலாம் - தாக்கலாம்’. அதை எதிரி பழகியிருக்கிறான். நாம் பழகவில்லை’.
இப்போது சுரேஷுக்கு ஏற்படும் புரிதல்தான், கற்றலின் அடுத்த நிலை. ஸ்டேஜ் 2. இதை ‘கான்சியஸ் இன்காம்பிடென்ஸ்’ (Concious Incompetence) என்பார்கள். தனக்குத் தெரியாது என்பதை உணர்ந்த நிலை.
சுரேஷ் உடனடியாக ஒரு கராத்தே பயிற்சி வகுப்பில் சேருகிறார். மாஸ்டர் சொல்லிக் கொடுப்பவற்றைச் செய்து பார்க்கிறார். சரியாக வரவில்லை. மாஸ்டர் திருத்துகிறார். மிக கவனமாகச் செய்யும் சுரேஷ், வலுவாகச் செய்யவில்லை; வேகமாகச் செய்யவில்லை. ஆனால் முயன்று, மாஸ்டர் சொல்வதுபோலவே செய்கிறார். அவரால் மிக கவனமாகச் செய்தால், மிகச் சரியான முறையில் செய்ய முடிகிறது.
இது ஸ்டேஜ் 3. சுரேஷ் கவனமாகச் செய்தால், சரியாகச் செய்யும் திறனைப் பெற்றுவிட்டார். இதன் பெயர், கான்சியஸ் காம்பிடென்ஸ் (Concious Competence).
அதன்பிறகு, சுரேஷ் தொடர்ந்து பயிற்சி வகுப்புகளுக்குப் போகிறார். சில ஸ்ட்ரோக்குகளை விரும்பி, அதிகம் பயிற்சி செய்கிறார். அவர் அவற்றைப் பல ஆண்டுகள் பழகுகிறார். அதனால், அந்த ஸ்ட்ரோக்குகளில் மிகச்சிறந்த திறனைப் பெற்றுவிடுகிறார்.
அந்த ஸ்ட்ரோக்கைப் பொருத்தவரை, சுரேஷ் ஒரு மாஸ்டர். இனி அவரால் அதை மிக அதிகக் கவனம் செலுத்தாமலேயேகூட, எந்த இடத்திலும் அநாயாசமாகச் செய்யமுடியும். இதுதான், கற்றலில் திறன் பெறுதலில் உச்ச நிலை. ஸ்டேஜ் 4.
இதை, அன்கான்சியஸ் காம்பிடென்ஸ் (Unconcious Competence) என்கிறார்கள். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட சொல்வார்கள் என்பார்களே, அப்படி.
கராத்தே போன்றவற்றில் மட்டுமில்லை. எல்லாக் கற்றலிலும் இதுதான் நடக்கிறது. மொழி கற்றுக்கொள்வது, வாகனங்கள் ஓட்டக் கற்றுக்கொள்வது போன்றவற்றில் எல்லாம், இந்த சுரேஷ் – குமார் - காராத்தே எடுத்துக்காட்டைப் பொருத்திப் பாருங்கள். சுவாரசியமாக இருக்கும். சுலபமாக மனத்தில் பதியும்.
இந்த நான்காம் நிலைதான், டேசிட் நாலெட்ஜ் என்று எனக்குப் படுகிறது. குயவன், பொற்கொல்லன், விளையாட்டு வீரர்கள், வெல்டர்கள், மிகச் சிறப்பாக பூ கட்டுபவர்கள், கோலம் போடுகிறவர்கள், சமையல் கலைஞர்கள் எல்லாம், இப்படிப் படிப்படியாகக் கற்றல் படி ஏறியவர்கள்தான்.
அன்கான்சியஸ் என்றால், ‘நினைவாக இல்லாமல்’ என்று பொருள். நினைவாக இல்லாமலேயே ஒரு விஷயத்தைச் செய்ய முடிகிறது. உதாரணத்துக்கு, காதுக்கும் தோள்பட்டைக்கும் இடையே செல்போனை வைத்துப் பேசியபடியே, இரு சக்கர வாகனத்தில், மிகச்சரியாக பல சிக்னல்கலையும் போக்குவரத்து நெரிசலையும் சமாளித்து, வீடு வந்து சேருகிறவர்கள்; வண்டியை ஸ்டாண்ட் போட்டுப் பூட்டிவிட்டு, வீட்டுக்குள் வரும்போதும் அதே நபருடன் செல்போனில் பேசிக்கொண்டிருப்பார்கள். (இப்படிச் செய்து ஆபத்தானது).
வண்டி ஓட்டப் பழகிய புதிதில் இது சாத்தியமா? இல்லை. காரணம், அப்போது கவனம் செலுத்தினால்தான் சரியாகச் செய்ய முடியும் என்கிற மூன்றாம் நிலைதான். ஆனால், பல ஆண்டுகளாக ஓட்டி ஓட்டி, நினைவாக இல்லாமலேயே செய்யக்கூடிய அளவு திசுக்களுகே அந்தத் திறன் வந்துவிட்டது. அதுதான் டேசிட் நாலெட்ஜ்.
நினைவாக இல்லாமேலே செய்ய முடிகிறதே! இது ஒரு ஆச்சரியம்தானே. இதன்பின் இருக்கும் சூட்சமம் என்ன?
(தொடரும்)