பிஞ்சு மனதில் நஞ்சு!
எங்கள் காலனியில் உள்ள ஒரு குட்டிப் பையனுக்கு பிறந்த நாள். அவனது பெற்றோர் ஒரு எவர்சில்வர் தட்டில் சில சாக்லேட்டுகளைப் பரப்பிக்கொடுத்து வீடு வீடாக அனுப்பினர்.
எங்கள் காலனியில் உள்ள ஒரு குட்டிப் பையனுக்கு பிறந்த நாள். அவனது பெற்றோர் ஒரு எவர்சில்வர் தட்டில் சில சாக்லேட்டுகளைப் பரப்பிக்கொடுத்து வீடு வீடாக அனுப்பினர். பழக்கமேயில்லாத என் வீட்டுக்கும் அந்தப் பையன் வந்து, ""ஆன்ட்டி, எனக்கு இன்றைக்கு பர்த்-டே'' என்று தட்டை நீட்டினான். நான் வாழ்த்துச் சொல்லிவிட்டு ஒரு சாக்லேட்டை எடுத்துக்கொண்டேன். அவன் தயங்கி நின்றான். அப்போதுதான் கவனித்தேன். அந்தத் தட்டில் சில பத்து ரூபாய் தாள்கள் இருந்தன. என்னிடம் சில்லறையாகப் பணம் இல்லாததால், ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த புதிய பேனாவை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தேன். அவன் முகம் வாடிப்போனது.
சிறு வயதிலேயே பிறரிடம் தட்டேந்தி யாசிக்கும் மோசமான குணத்தைப் பெற்றோரே கற்றுத்தரலாமா? பழக்கமே இல்லாதவர்களிடம்கூட பணத்தை எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
இப்படித்தான் கடந்த மாதம் எதிர் வீட்டுப் பையன் பள்ளியில் சமூகப் பணிக்கு நிதி திரட்டுகிறார்கள் என்று கூறி ஒரு நோட்டை நீட்டி நன்கொடை கேட்டான். கொடுத்தேன். அப்புறம்தான் தெரிந்தது, அவன் கிரிக்கெட் பேட் வாங்க இப்படிப் பொய் சொல்லி காலனியில் இருப்பவர்களிடம் பணம் வசூலித்தான் என்று. இப்படி வசூலிக்குமாறு அவனுடைய பெற்றோரே சொல்லிக் கொடுத்தார்கள் என்று பிறகு தெரியவந்தது.
Advertisement
சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லித்தர வேண்டிய பெற்றோர், பொய் சொல்லியாவது, பிச்சை எடுத்தாவது பணம் சம்பாதிக்கலாம் என்று கற்றுக்கொடுத்தால் அது எங்கு போய் நிற்கும்? பெற்ற குழந்தைக்குத் தவறான வழியைக் காட்டுவது மன்னிக்கவே முடியாத குற்றமாகும். இனியாவது இத்தகைய பெற்றோர்கள் திருந்துவார்களா?