முகப்பு
கருத்துக் களம்

உங்கள் குழந்தைகள் எங்கே?

சமீபத்தில் ஒரு விழாவில் சந்தித்த என் நண்பனையும் அவன் மனைவியையும் நான் கேட்ட கேள்வி: எங்கே உங்கள்

Updated On : 28 ஜூலை, 2025 at 4:27 AM
பகிர்:

சமீபத்தில் ஒரு விழாவில் சந்தித்த என் நண்பனையும் அவன் மனைவியையும் நான் கேட்ட கேள்வி: எங்கே உங்கள் பிள்ளைகள்? அதற்கு அவர்கள் தந்த பதில்:  இங்க கூட்டிட்டு வந்தா கூடவே வெச்சிருக்கணும், எல்லாருக்கும் அறிமுகப்படுத்திட்டிருக்கணும், எல்லாரும் பேர் என்னன்னு கேட்பாங்க, என்ன படிக்கறேன்னு கேட்பாங்க, இரண்டு பேரும் ஒழுங்கா பதில் சொல்லமாட்டாங்க, நமக்கு பதற்றமாகிவிடும், அப்புறம் அவுங்களையே கவனிச்சிட்டு இருக்கணும், சாப்பிட வைக்கணும், அவுங்க இரண்டுபேருக்கும் இடையே சண்டை வராம பார்த்துக்கணும், ஏதாவது அறிவுரை சொல்லிட்டே இருக்கணும் இதையெல்லாம் யோசிச்சுதான் பக்கத்து வீட்டில விட்டுட்டு வந்துட்டோம். 

இந்தப் பெற்றோர் சொன்ன காரணங்கள் உண்மையானதாகவே இருந்தாலும், அதற்காக பிள்ளைகளை வெளியே எங்கேயும் அழைத்துச் செல்லாமல் இருப்பது எவ்வகையில் நியாயம்? எத்தனை நாளைக்கு பக்கத்து வீட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள்?  அவர்களின் பாதுகாப்பிற்கு யாராவது உத்தரவாதம் தருகிறார்களா? இப்படி எவ்வித பாதுகாப்பு, உத்தரவாதம் இல்லாத சூழலில் தங்கள் சுதந்திரத்திற்காகவும், தாங்கள் போகும் இடங்களில் செüகரியமாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தங்கள் குழந்தைகளை வீட்டிலோ, பக்கத்து வீட்டிலோ, உறவினர் வீட்டிலோ விட்டு வருவது எந்த வகையில் நியாயம்? 

அந்தக் குழந்தைகளுக்கு வெளி உலகம் தெரிவது எப்போது? இதுதான் குழந்தைகளை வளர்க்கும் முறையா? 

Advertisement

செல்லுமிடங்களில் பலர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் நல்ல முறையில் சொல்ல போகப் போக பழகிவிடுவார்கள். சிலர் நமது குழந்தைகளைப் பார்த்து படித்து முடித்து எதிர்காலத்தில் என்னவாக வரப்போகிறாய்  எனக் கேட்பார்கள். அதன் மூலம் நமது குழந்தைகளுக்கு எதிர்காலம் குறித்த விழிப்புணர்வும், எதிர்காலத்தில் என்னவாக வரவேண்டும் என்கிற சிந்தனையும் எழும். அப்படி அவர்கள் மனதில் பதியும் சிந்தனைகள், வாழ்க்கை லட்சியங்கள் அவர்களின் அன்றாட வாழ்வில் மாற்றத்தையும், அவர்கள் இலக்கை நோக்கிய பயணத்திற்கும் உந்துதலாகவும் இருக்கும். இப்படி லட்சியங்களை நிர்ணயித்து அதன்படி முயன்று கொண்டிருக்கின்ற எத்தனையோ மாணவ மாணவிகளை நாம் காணலாம். 

நான் வழக்கமாக சந்திக்கும் மாணவ, மாணவிகளை அவர்கள் கல்லூரியில் படிப்பவர்களாக இருந்தாலும் அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி : எதிர்காலத்தில் என்னவாக வர விருப்பம் என்பதுதான். இதுவும் எனக்கு ஒரு நண்பர் பழக்கிய பழக்கம்தான். அவரைச் சந்திக்க நான் செல்லும் போதெல்லாம் தன் மகனிடம் அவனின் லட்சியத்தைப் பற்றிக் கேட்கச் சொல்லுவார்.

ஏன் அப்படி கேட்கச் சொல்கிறீர்கள் எனக் கேட்டால், அப்படி அவனுடைய லட்சியத்தை அடிக்கடி ஞாபகப்படுத்தினால்தான் அவனின் லட்சியம் நோக்கிய பயணத்தில் உறுதி ஏற்படும் என்பார்.

அதன்படியே இப்போது இரண்டு ஆண்டு இடைவெளியில் சந்தித்தபோது தனது லட்சியத்தில் வெற்றியடைந்து காவல் பணியில் தேர்ச்சிபெற்று பயிற்சி காலத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இது ஒரு உதாரணம்தான். உன் எதிர்கால லட்சியம் என்ன என்று கேட்பதில் நமக்கு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. மாறாக, இதுவரை தனது வாழ்க்கை லட்சியத்தை நிர்ணயிக்காதவர்கள் அதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கித் தர முடியும். 

இதைத் தவிர தனிமனிதனாக இருக்கும் வரை கவலையற்று இருக்கும் நாம், திருமணம் முடிந்தவுடன் நம் மனைவிக்காக வாழும் சூழல் உருவாகிறது. பின்னர் குழந்தைகள் பெற்றபின்னர் நமது வாழ்க்கை அவர்களுக்காக என்று ஆகிறது. பெரும்பாலான பெற்றோர் தாங்கள் ஓடி உழைத்துச் சம்பாதிப்பது எதற்கு எனக் கேட்டால், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு என்றுதான் சொல்வார்கள். அப்படியிருக்க, தாங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தாங்கள் பெற்ற குழந்தைகளை தாற்காலிகமாக பக்கத்து வீட்டில் விடுவதும், உறவினர் வீட்டில் விடுவதும் சரியா?.

ஆசை ஆசையாக குழந்தையைப் பெற்று சீராட்டி வளர்த்து சற்று பெரியவர்கள் ஆனதும் ஹாஸ்டலில் விடும் பழக்கமும் இப்போது பெருகிக்கொண்டே வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல. முந்தைய தலைமுறைகளில் தாங்கள் பெற்றது ஐந்து குழந்தைகளானாலும் படிக்க வைத்து திருமணம் செய்துகொடுப்பது வரை தங்கள் பாதுகாப்பிலேயே வைத்திருந்த பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது நாம் இப்போது உணர முடியும்.

 இந்தத் தலைமுறையில் தாங்கள் பெற்ற ஒன்றிரண்டு குழந்தைகளையும் சரியாக வளர்க்கத் தெரியாமல், அல்லது வளர்ப்பதற்கு விரும்பாமல் ஹாஸ்டலில் விடுவது என்பதும், தங்களுடன் வளர்ந்தாலும் வெளியே எங்கேயும் கூட்டிச் செல்லாமல் வீட்டிலேயே அடைத்து வளர்ப்பதும் முறையான வளர்ப்பாக இல்லை.

எனவே, நமது குழந்தைகள் வெளி உலகம் தெரிந்துகொள்ள வேண்டும். உறவு முறைகள் புரிந்துகொள்ள வேண்டும். பொது இடங்களில் பழகத் தெரிந்து கொள்ள வேண்டும்.  பலர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரிய வேண்டும்.

தங்கள் எதிர்காலம் குறித்த சிந்தனைகளை நிர்ணயிக்கத் தெரிய வேண்டும். அதன்படி தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவேண்டும். அவர்களின் லட்சியப் பாதைக்கு உதவும் வகையில் பெற்றோர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments