பகுதி 26 – அதிசயப் பத்து - 4
தசை என்கிற ஓட்டை விழுந்த சுவரும், புழுக்கள் நெளிகிற, உளுத்துப்போன, நிணநீர் கசிகிற பொய்யான கூரையும் கொண்ட இந்த உடல் என்கிற வீட்டை உண்மை என்று கருதினேன், அதனால், துன்பக்கடலில் சுழியில் சிக்கி அலைந்தேன்,
சிவபெருமானின் திருக்கோலத்தையும் அவர் தனக்கு அருள்செய்த தன்மையையும் எண்ணி வியப்படைந்து மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை, பத்து பாடல்கள்.
162
பாடலின்பம்
பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந்து
உளுத்துஅசும்பு ஒழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்எனக்கருதிநின்று
இடர்க்கடல் சுழித்துஅலைப்படுவேனை
முத்து மாமணி, மாணிக்க
வயிரத்த பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டு தன் அடியரில்
கூட்டிய அதிசயம் கண்டோமே.
*
நீக்கி முன்எனைத் தன்னோடு
நிலாவகை குரம்பையில் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன
சொல்செய்து நுகம்இன்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய்அறத்
துகள்அறுத்துஎழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டு தன் அடியரில்
கூட்டிய அதிசயம் கண்டோமே.
பொருளின்பம்
தசை என்கிற ஓட்டை விழுந்த சுவரும், புழுக்கள் நெளிகிற, உளுத்துப்போன, நிணநீர் கசிகிற பொய்யான கூரையும் கொண்ட இந்த உடல் என்கிற வீட்டை உண்மை என்று கருதினேன், அதனால், துன்பக்கடலில் சுழியில் சிக்கி அலைந்தேன்,
அத்தகைய என்னை, முத்து, மாமணி, மாணிக்கம், வயிரம், பவளம், இவை அனைத்தும் சேர்ந்தது போன்ற பிரகாசம் நிறைந்த முழுச்சோதியாகிய என் தந்தை சிவபெருமான் ஆட்கொண்டான், தன்னுடைய அடியவர்களில் ஒருவனாக ஆக்கினான், இது அதிசயமல்லவா!
*
முன்பு நான் செய்த குற்றங்களால், எம்பெருமான் என்னைத் தன்னிடம் சேராதபடி நீக்கினான், உடல் என்கிற சிறுகுடிலில் புகவைத்தான், பின்னர், என்னைக் கருணையோடு பார்த்தான், மிக நுட்பமான ஒரு சொல்லை / தத்துவத்தை ஒரு நொடியில் சொன்னான், நுகத்தடி இல்லாமல் நிலத்தை உழுவதுபோல என்னை மாயையிலிருந்து விலக்கிவிட்டான், நான் முன்பு செய்த பொய்களை நீக்கி, குற்றங்களை அகற்றினான்,
எழுச்சிமிகுந்த சுடர்ச்சோதியான சிவபெருமான் என்னைத் தன் அடிமையாக்கினான், ஆட்கொண்டான், தன்னுடைய அடியவர்களில் ஒருவனாக ஆக்கினான், இது அதிசயமல்லவா!
சொல்லின்பம்
பொத்தை: ஓட்டை
ஊன்: உடல்
அசும்பு: நிணநீர்
இத்தை: இதை
இடர்க்கடல்: துன்பக்கடல்
அலைப்படுவேன்: அலைமோதுவேன்/ துன்பப்படுவேன்
அத்தன்: தந்தை
நிலாவகை: நிற்காதபடி
குரம்பை: சிறுகுடில்
நுண்ணிய நொடியன: நுட்பமான, நொடியில் சொல்லக்கூடியவை
நுகம்: நுகத்தடி
விளாக்கைத்து: உழுது
துகள்அறுத்து: குற்றங்களை நீக்கி