பகுதி 1. சிவபுராணம்-2
ஈசன் அடி போற்றி, எந்தை அடி போற்றி,தேசன் அடி போற்றி, சிவன் சேவடி போற்றி,
2
பாடலின்பம்
ஈசன் அடி போற்றி, எந்தை அடி போற்றி,
தேசன் அடி போற்றி, சிவன் சேவடி போற்றி,
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி,
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி,
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
பொருளின்பம்
இறைவன் திருவடிகளுக்கு வணக்கம்,
எங்கள் தந்தை திருவடிகளுக்கு வணக்கம்,
ஒளி நிறைந்த வடிவம் கொண்டவனின் திருவடிகளுக்கு வணக்கம்,
சிவனின் செம்மையான திருவடிகளுக்கு வணக்கம்,
அடியவர்களின் அன்பில் நிற்கிற தூய்மையான நிமலனின் திருவடிகளுக்கு வணக்கம்,
மாயப் பிறப்பு என்னும் சுழலை அறுக்கின்ற மன்னனின் திருவடிகளுக்கு வணக்கம்,
சிறப்பு நிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் நம் தேவனின் திருவடிகளுக்கு வணக்கம்,
சொல்லின்பம்
* ஈசன்: இறைவன்
* எந்தை: என் தந்தை
* தேசன்: தேசு: ஒளி நிறைந்தவன்
* சேவடி: செம்மை + அடி: சிவந்த திருவடிகள், அல்லது செம்மையான திருவடிகள்
* நேயம்: அன்பு (நேசம்)
* நிமலன்: தூய்மையானவன் (அசுத்தங்கள் இல்லாதவன்)
* சீர்: சிறப்பு
* ஆர்: நிறைந்த