பகுதி 2 - கீர்த்தித் திரு அகவல் 7
அவனது திருமுகத்தில் அழகான புன்னகை சிந்துகிறவன்,அப்படிப்பட்ட சிவபெருமான்,
14
பாடலின்பம்
‘நாத! நாத!’ என்று அழுது அரற்றிப்
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்
‘பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக!’ என்று
இதம் சலிப்பு எய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்
எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம்பொன்
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்
கனி தரு செவ்வாய் உமையொடு காளிக்(கு)
அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கு இனிது அருளினன்
ஒலி தரு கயிலை உயர் கிழவோனே!
பொருளின்பம்
‘எங்கள் தலைவனே! எங்கள் தலைவனே!’ என்று அழுது அரற்றியபடி அவனுடைய திருவடிகளைச் சேர்ந்தவர்கள், அவன் திருவடிகளே நிரந்தரம் என்று தங்குவார்கள், ‘பதஞ்சலி முனிவருக்கு அருள்
செய்த சிறந்த கூத்தனே’ என்று உள்ளம் சோர்வடைய நின்றபடி வருந்துவார்கள்,
அழகான இமயமலையின் தன்மையோடு சிறந்து விளங்கும் அழகிய பொன்னாலான அம்பலத்தில் நடனம் செய்கிறவன், கனிபோன்ற சிவந்த வாயைக் கொண்ட உமையம்மைக்கும் காளிக்கும் அருள்
புரிந்தவன், அவனது திருமுகத்தில் அழகான புன்னகை சிந்துகிறவன்,
அப்படிப்பட்ட சிவபெருமான், எந்நேரமும் நல்ல ஒலிகள் எழுந்துநிற்கும் கயிலை மலையைத் தனக்கு உரிமையாகக் கொண்ட உயர்ந்தவன், தன்னைத் தேடிவந்த அன்பர்களுடன் திருப்புலியூர் என்ற
திருத்தலத்தில் எழுந்தருளி நன்மை தருகிறான்!
சொல்லின்பம்
நாதன்: தலைவன்
பரம: சிறந்த
நாடகன்: நடனமாடும் கூத்தன்
இதம்: உள்ளம்
அம்பொன்: அழகிய தங்கம்
பொலி: பொலிகின்ற/ அழகு சிறந்து விளங்குகின்ற
நடம்: நடனம்
ஈண்டிய: சேர்ந்த
புக்கு: புகுந்து
கிழவோன்: உரிமையானவன்