பகுதி 15 – திருத்தோணோக்கம் 5
ஆயிரம் தாமரை மலர்களால் சிவபெருமானை அர்ச்சிக்க எண்ணினார் திருமால்.
தோளைப் பார்த்துப் பாடுவது தோள்நோக்கம், அல்லது, தோணோக்கம், இரு தோழியர் ஒருவர் தோளை ஒருவர் பார்த்துப் பாடியபடி விளையாடுவது, அல்லது, வெற்றியடைந்த மன்னன் ஒருவனுடைய வீரத்தோளைப் பார்த்துப் பிறர் பாடுவதைத் தோணோக்கம் என்பார்கள். அவ்வகையில் சிவபெருமானின் பெருமைகளை மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.
இப்பகுதியில் பதினான்கு பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
102
எண்உடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக்
கண்நுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதன்பின்
எண்இலி இந்திரர், எத்தனையோ பிரமர்களும்
மண்மிசை மால்பலர் மாண்டகர்காண் தோள்நோக்கம்.
*
பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர்பூக் குறையத்
தம்கண் இடந்து அரன் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்கு அருளியவாறு
எங்கும் பரவி நாம் தோள்நோக்கம் ஆடாமோ.
பொருளின்பம்
அன்றைக்கு, முப்புரங்களை நெற்றிக்கண் கொண்ட எங்கள் தந்தையாகிய சிவபெருமான் அழித்தபோது, அவரை எண்ணிய மூன்று ராட்சஸர்களைமட்டும் எரித்து அழிக்கவில்லை, அவர்களைத் தனது வாயில்காவலர்களாக வைத்துக்கொண்டார்.
அதன்பிறகு, எண்ணற்ற இந்திரர்கள், பிரம்மர்கள், திருமால்கள் இந்த மண்ணில் பிறந்தார்கள், அழிந்தார்கள், அவர்களில் இப்படிப்பட்ட அருளைப் பெற்றவர் யார்? அவரது கருணையைச் சொல்லி நாம் தோள்நோக்கம் ஆடுவோம்.
*
ஆயிரம் தாமரை மலர்களால் சிவபெருமானை அர்ச்சிக்க எண்ணினார் திருமால். அதில் ஒரு பூ குறைந்தது. ஆகவே, தாமரைபோன்ற தன்னுடைய கண்களில் ஒன்றைப் பெயர்த்து அரன் சேவடியில் வைத்து வழிபட்டார். அதனால் மகிழ்ந்த சங்கரன் அவருக்குச் சக்கரப்படையை அருளினார். அந்தத் தன்மையைப் பாடி நாம் தோள்நோக்கம் ஆடுவோம்.
சொல்லின்பம்
எண்உடை: எண்ணிய
இராக்கதர்கள்: ராட்சஸர்கள்
எரி: நெருப்பு
கண்நுதல்: நெற்றிக்கண் கொண்ட சிவபெருமான்
எந்தை: என் தந்தை
கடைத்தலை: வாயில்படி
எண்இலி: எண்ண இயலாத
மண்மிசை: பூமியில்
பங்கயம்: தாமரை
இடந்து: தோண்டி
சேவடி: செம்மையான அடி
சாத்தலுமே: சாற்றி வழிபடவும்
எம்பிரான்: எங்கள் தலைவன்
சக்கரம்: சக்கரப்படை
மாற்கு: மாலுக்கு/ திருமாலுக்கு
அருளியவாறு: அருளிய தன்மை
பரவி: எல்லா இடங்களுக்கும் பரப்பி/ எடுத்துச்சொல்லி