முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 16 – திருப்பொன்னூசல் -1

ஊசல் என்றால், ஊஞ்சல். பெண்கள் ஊஞ்சலில் ஆடியபடி பாடக்கூடிய பாடல்கள் இவை. அவற்றில் சிவபெருமானின் பெருமையைப் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:08 PM
பகிர்:

ஊசல் என்றால், ஊஞ்சல். பெண்கள் ஊஞ்சலில் ஆடியபடி பாடக்கூடிய பாடல்கள் இவை. அவற்றில் சிவபெருமானின் பெருமையைப் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர்.

இந்தப் பகுதியில் ஒன்பது பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

105

பாடலின்பம்

சீர்ஆர் பவளம் கால், முத்தம் கயிறுஆக

ஏர்ஆரும் பொன்பலகை ஏறி இனிதுஅமர்ந்து

நாராயணன் அறியா நாள்மலர்த்தாள், நாய்அடியேற்கு

ஊராகத் தந்துஅருளும் உத்தரகோசமங்கை

ஆராஅமுதின் அருள்தாள்இணை பாடிப்

போர்ஆர்வேல்கண் மடவீர், பொன்ஊசல் ஆடாமோ.

பொருளின்பம்

போர் செய்கின்ற வேலைப்போன்ற கண்களைக் கொண்ட பெண்களே,

சிறந்த பவளத்தினால் தூண் அமைத்து, அதில் முத்துகளைக்கொண்டு கயிறு செய்து, அழகிய தங்கத்தால் பலகை செய்து ஊஞ்சல் அமைத்துள்ளோம். அதன்மீது இனிதாக ஏறி அமர்ந்துகொள்வோம்,

அன்று மலர்ந்த பூக்களைப்போன்ற சிவபெருமானின் திருவடிகளைத் திருமாலாலும் காண இயலவில்லை. ஆனால் அவரோ, அத்தகைய சிறந்த திருவடிகளை நாய்போன்ற எனக்குக் காட்டினார், அங்கேயே தங்கும்படி எனக்கு அருள் செய்தார்.

உத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் தெவிட்டாத அமுதமான அந்தச் சிவபெருமானின் அருள் பொழியும் திருவடிகளைப் பாடி நாம் பொன்னூசல் ஆடுவோம்.

சொல்லின்பம்

சீர்: சிறப்பு

கால்: தூண்

முத்தம்: முத்து

ஏர்: அழகு

ஆரும்: சேர்கிற

நாள்மலர்: அன்று பூத்த மலர்

தாள்: பாதம்/ திருவடி

ஊர்: தங்குமிடம்

ஆரா: தெவிட்டாத

தாள் இணை: இரு திருவடிகள்

போர்ஆர்வேல்: போர் செய்யும் வேல்

மடவீர்: பெண்களே

முழு கட்டுரையைப் படிக்க →