பகுதி 16 – திருப்பொன்னூசல் -4
கழுத்திலே நஞ்சை ஏந்தியுள்ளவன், அண்டங்கள் அனைத்திலும் வாழ்கிறவர்களின் தலைவன் சிவபெருமான்,
ஊசல் என்றால், ஊஞ்சல். பெண்கள் ஊஞ்சலில் ஆடியபடி பாடக்கூடிய பாடல்கள் இவை. அவற்றில் சிவபெருமானின் பெருமையைப் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர்.
இந்தப் பகுதியில் ஒன்பது பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
108
பாடலின்பம்
நஞ்சுஅமர் கண்டத்தன், அண்டத்தவர் நாதன்,
மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை
அம்சொலாள்தன்னோடும் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்று அமுதம்ஊறிக் கருணைசெய்து
துஞ்சல், பிறப்பு அறுப்பான் தூய புகழ் பாடிப்
புஞ்சம்ஆர் வெள்வளையீர், பொன்னூசல் ஆடாமோ.
பொருளின்பம்
வெண்மையான பல சங்கு வளையல்களை அணிந்துள்ள பெண்களே,
கழுத்திலே நஞ்சை ஏந்தியுள்ளவன், அண்டங்கள் அனைத்திலும் வாழ்கிறவர்களின் தலைவன் சிவபெருமான், மேகங்கள் தவழ்கிற மணிமாடங்களைக் கொண்ட உத்தரகோசமங்கையில், அழகிய சொற்களைப் பேசும் உமையம்மையுடன் எழுந்தருளியுள்ளவன், அடியவர்களின் நெஞ்சில் நின்று, அமுதமாக ஊறிக் கருணை செய்கிறவன், இறப்பு, பிறப்பு என்கிற சுழலை அறுத்து மோட்சம் தருகிறவன், அவனுடைய புகழைப் பாடி நாம் பொன்னூசல் ஆடுவோம்.
சொல்லின்பம்
கண்டத்தன்: கழுத்தைக் கொண்டவன்
நாதன்: தலைவன்
மஞ்சு: மேகம்
அம்சொலாள்: அழகிய சொற்களைச் சொல்கிறவள்/ இங்கே உமையம்மையைக் குறிக்கிறது
துஞ்சல்: இறப்பு
புஞ்சம்: தொகுப்பு