பகுதி 16 – திருப்பொன்னூசல் - 7
எண்ண இயலாத அளவு சிறப்புகளைக் கொண்ட திரு உத்தரகோசமங்கையில் எழுந்தருளி விளங்கும் பெருமான்,
ஊசல் என்றால், ஊஞ்சல். பெண்கள் ஊஞ்சலில் ஆடியபடி பாடக்கூடிய பாடல்கள் இவை. அவற்றில் சிவபெருமானின் பெருமையைப் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர்.
இந்தப் பகுதியில் ஒன்பது பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
111
பாடலின்பம்
உன்னற்குஅரிய திரு உத்தரகோசமங்கை
மன்னிப் பொலிந்துஇருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்துஇறைஞ்சப் பாவங்கள் பற்றுஅறுப்பான்
அன்னத்தின்மேல் ஏறிஆடும் அணிமயில்போல்
என்அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
பொன்ஒத்த பூண்முலையீர், பொன்னூசல் ஆடாமோ.
பொருளின்பம்
திருமகள்போல் அழகானவர்களே, ஆபரணங்கள் அணிந்த மார்பகங்களைக் கொண்ட பெண்களே,
எண்ண இயலாத அளவு சிறப்புகளைக் கொண்ட திரு உத்தரகோசமங்கையில் எழுந்தருளி விளங்கும் பெருமான், வேதங்களின் தலைவன் சிவபெருமான், அவனுடைய புகழைப் பாடிப் பணிந்து இறைஞ்சினால், நம்முடைய பாவங்களையும் பற்றுகளையும் அறுத்துவிடுவான், என் தந்தையாகிய அந்தப் பெருமான் என்னையும் ஆட்கொண்டான், அவனுடைய எழிலைப் பாடுவோம், அன்னத்தின்மேல் ஏறி ஆடும் அழகிய மயிலைப்போல நாம் பொன்னூசல் ஆடுவோம்.
சொல்லின்பம்
உன்னற்கு: நினைப்பதற்கு
அரிய: அரிதான
மன்னி: நிலைபெற்று
மாமறையோன்: சிறந்த வேதங்களின் தலைவன்
பன்னி: பலமுறை சொல்லி
இறைஞ்ச: வணங்க
அணிமயில்: அழகிய மயில்
அத்தன்: தந்தை
பூண்: ஆபரணம்