பகுதி - 182
பழமுதிர்ச்சோலையைப் பற்றி நம்முடைய 146-வது தவணையிலே சொல்லியிருக்கிறோம்.
பழமுதிர்ச்சோலையைப் பற்றி நம்முடைய 146-வது தவணையிலே சொல்லியிருக்கிறோம். இன்று பார்க்கும் பாடல் மிகவும் பிரபலமான பழமுதிர்ச்சோலைத் திருப்புகழ். பெங்களூர் ரமணியம்மாளின் வெண்கலக் குரலில், இந்தப் பாடல் பலகாலமாக அடியார் மனங்களை ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=lzqjEDvftXc
அகரமுதல எழுத்தெல்லாம் என்று வள்ளுவர் தொடங்கியது எந்தக் கருத்திலோ அதே கருத்து இந்தப் பாடலிலும் வெளிப்படுகிறது. இந்தப் பாடலில் ‘வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உறைவோனே’ என்பதற்குப் பொருள் சொல்கையில், “கதிர்காமத்தில் ஒரு வேடன் வேலவரைப் பூசித்துப் பேறுபெற்ற வரலாறு இங்குக் குறிக்கப்பட்டுள்ளது” என்று தணிகைமணி குகத்திரு செங்கல்வராய பிள்ளையவர்கள் விளக்குகிறார்கள்.
அந்த வரலாற்றின் சுருக்கம் இது: ‘முருகன் தன் வேலைப் பாராட்ட, ‘அந்த வேலுக்குப் பெருமையே என்னால்தான்’ என்று அருகிலிருந்த பிரமன் பெருமை பேசினான். முருகனுடைய சாபத்துக்கு ஆளான பிரமன் ‘அந்திமான்’ என்ற பெயருள்ள வேடனாகப் பிறந்தான். அதன்பிறகு ஒருமுறை பிப்பலாத முனிவரைக் கொல்ல முயலும்போது, அவருடைய அருளால் ஞானம் கைவரப்பெற்றான்; அதன்பிறகு முருகனைப் பூசித்து ஆறெழுத்தை ஓதி வேடத்தன்மை நீங்கினான். இடையெழு வள்ளல்கள் எழுவரில் ஒருவனானான்’ என்று சுப்ரமணிய பராக்ரமம் என்ற நூலில் ‘சதுர்முக சாபாரி மூர்த்தி’ என்று குறிக்கப்பட்டுள்ள கதையை பிள்ளையவர்கள் எடுத்துக் காட்டுகிறார்.
Advertisement
திருப்புகழுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் பலவகையான ஆச்சரியமிக்க செய்திகளுள் இதுவும் ஒன்று.
தனதன தான தனதன தான
தனதன தான - தனதான
அகரமு மாகி யதிபனு மாகி
யதிகமு மாகி - அகமாகி
அயனென வாகி அரியென வாகி
அரனென வாகி - அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி
யினிமையு மாகி - வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ
எனதுமு னோடி - வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி
மகிழ்களி கூரும் - வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை
மகிழ்கதிர் காம - முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி
திமியென ஆடு - மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை
மலைமிசை மேவு - பெருமாளே.
</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/252123338&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>