முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 405

பிறந்த பிறப்பு வீணாகும்படியாக

Updated On : 8 நவம்பர், 2016 at 5:39 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:09 AM

பதச் சேதம்

சொற் பொருள்

ஏது புத்தி ஐயா எனக்கு இனி யாரை நத்திடுவேன் அவத்தினிலே இறத்தல் கொலோ எனக்கு நி தந்தை தாய் என்றே

Advertisement

 

நத்திடுவேன்: நாடிடுவேன்; அவத்தினில்: (அவம்) வீணாக; எனக்கு நி: எனக்கு நீ (குறுக்கல் விகாரம்;

 

                         

இருக்கவும் நான் இப்படியே தவித்திடவோ சகத்தவர் ஏசலில் படவோ நகைத்தவர் கண்கள் காண

 

 

பாதம் வைத்திடு ஐயா தெரித்து எனை தாளில் வைக்க நியே மறுத்திடில் பார் நகைக்கும் ஐயா தகப்பன் முன் மைந்தன் ஓடி

 

தெரித்து: (என் நிலையைத்) தெரிந்து, தெரிந்துகொண்டு; தாளில் வைக்க: பாதத்தில் சேர்த்துக்கொள்ள; நியே: நீயே;

பால் மொழி குரல் ஓலம் இட்டிடில் யார் எடுப்பது எனா வெறுத்து அழ பார் விடுப்பார்களோ எனக்கு இது சிந்தியாதோ

 

பார் விடுப்பர்களோ: உலகத்தார் விடுவார்களோ;

ஓதம் உற்று எழு பால் கொதித்தது போல எண் திகை நீச முட்டரை ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள் கோவே

 

ஓதம் உற்று: ஓசை உற்று; எண் திகை: எட்டுத் திசை; முட்டர்: மூடர்; பாநுசக்தி: சூரியனைப் போல ஒளிவிடும் சக்தி(யாகிய வேல்);

ஓதம் மொய் சடை ஆட உற்று அமர் மான் மழு கரம் ஆட பொன் கழல் ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்த வாழ்வே

 

ஓதம் மொய்: (கங்கையின்) வெள்ளம் பெருகும்; மழு: கோடரி; நடித்தவர்: நடனமாடியவர்; வாழ்வு: செல்வம்;

மா தினை புன மீது இருக்கு மை வாள் விழி குற மாதினை திரு மார்பு அணைத்த மயூர அற்புத கந்த வேளே

 

மா தினைப் புனம்: பெரிய தினைப் புனம்; மைவாள் விழி: மை தீட்டிய ஒளிபொருந்திய விழி; மயூர: மயில் வாகனனே;

மாரன் வெற்றி கொள் பூ முடி குழலார் வியப்புற நீடு மெய் தவர் வாழ் திருத்தணி மா மலை பதி தம்பிரா¡னே.

 

மாரன்: மன்மதன்;

ஏது புத்திஐ யாஎனக்கு... எனக்கு புத்தி ஏதையா?

இனி யாரை நத்திடுவேன்... இதற்குமேல் யாரைச் சென்று நான் நாடுவது?

அவத்தினிலே யிறத்தல்கொலோ... (பிறப்பு) வீணாகுமாறு நான் இறக்கத்தான் வேண்டுமா?

எனக்குனி. தந்தைதாயென்றேயி ருக்கவு நானு மிப்படியே தவித்திடவோ... நீயே எனக்குத் தந்தையும் தாயுமாக இருக்கும்போது, நான் இப்படித் தவித்திடலாமா?

சகத்தவர் ஏசலிற்படவோ... உலகிலுள்ளவர்களுடைய ஏச்சுக்கு நான் ஆளாக வேண்டுமா?

நகைத்தவர் கண்கள்காணப் பாதம் வைத்திடு ஐயா... என்னை இகழ்ச்சியாகப் பார்த்துச் சிரிப்பவர்களுடைய கண் முன்னாலேயே நீ என்னை உன் திருவடிகளிலே சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தெரித்தெனை தாளில் வைக்கநியேம றுத்திடில்... என் நிலைமையை அறிந்தும் நீ என்னை உன்னுடைய திருவடிகளில் சேர்த்துக்கொள்ள மறுத்தால்,

பார்நகைக்குமையா.. உலகத்தவர்கள் அதைப் பார்த்துச் சிரிப்பார்கள் ஐயா! 

தகப்பன்முன் மைந்தனோடி பால்மொழிக் குரல் ஓல மிட்டிடில்... தந்தைக்கு முன்னாலே ஓடிவரும் மகன், பால்மணம் கமழும் வாயால் குரலெடுத்து அழுதால்,

யாரெ டுப்பதெனாவெ றுத்து... ‘யார் இந்தக் குழந்தையைத் தூக்கிக் கொள்வார்கள் என்று வெறுத்து,

அழ பார்வி டுப்பர்களோ . எனக்கிது சிந்தியாதோ.. (அந்தக் குழந்தையை) உலகத்தோர் அழவிட்டுவிடுவார்களா? என் புத்தியிலே இது படாதா?

ஓத முற்றெழு பால்கொதித்தது போல... ஓசையோடு பொங்கும் பால் கொதிப்புற்றதைப் போல,

எண் திகை நீசமுட்டரை... எட்டுத் திசைகளிலும் இருக்கும் இழிந்த மூடர்(களான அரக்கர்களை),

ஓட வெட்டிய பாநு சத்திகை யெங்கள்கோவே... சிதறியோடும்படியாக வெட்டி வீழ்த்தியதும்; சூரியனைப்போல சுடர்விடுவதுமான சக்திவேலைக் கையிலே ஏந்திய எங்கள் அரசே!

ஓத மொய்ச்சடையாட... கங்கை வெள்ளம் பெருகுகின்ற அடர்ந்த சடாமுடி ஆடும்படியாகவும்;

உற்று அமர் மான்மழுக்கர மாட... பொருந்தி அமர்ந்துள்ள மானும் மழுவாயுதமும் ஏந்திய கரங்கள் ஆடும்படியாகவும்;

பொற்கழலோசை பெற்றிடவே நடித்தவர் தந்தவாழ்வே... திருப் பாதங்களில் அணிந்துள்ள கழல்கள் ஒலிக்கும்படியாகவும் நடனம் புரிந்த சிவனார் அளித்த செல்வமே!

மாதினைப்புன மீதிருக்கு... பெரிய தினைப்புனத்தின் மீது இருந்த,

மைவாள்விழிக்குற மாதினை... மை தீட்டியதும், ஒளிமிகுந்ததுமான கண்களை உடைய குறப்பெண்ணான வள்ளியம்மையை,

திருமார்ப ணைத்த மயூர அற்புத கந்தவேளே... திருமார்பில் பொருந்தத் தழுவிக் கொண்ட மயில் வாகனனே!  அற்புதனே!  கந்தவேளே!

மாரன் வெற்றிகொள் பூமுடிக்குழலார்வியப்புற... மன்மதன் வெற்றிபெற (ஏதுவாக) மலர்களைச் சூட்டிய கூந்தலை உடைய பெண்கள் ஆச்சரியப்படும்படியாக,

நீடு மெய்த்தவர் வாழ்திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே.... பெரியதும் மெய்யானதுமான தவசிகள் வாழ்கின்ற திருத்தணி என்ற பெரிய மலைத் தலத்தில் வீற்றிருக்கின்ற தம்பிரானே!

சுருக்க உரை

ஓசையோடு பெருகியெழும் பால் கொதித்துப் பொங்கியதைப் போல, எட்டுத் திசைகளிலும் இருந்த இழிந்த மூடர்களான அரக்கர்கள் சிதறியோடுமபடியாக அவர்களை வெட்டிவீழ்த்தியதும்; சூரியனைப் போலச் சுடர்விடுவதுமான சக்தியாயுதத்தை ஏந்திய அரசே!  கங்கை வெள்ளம் பெருகுகின்ற அடர்ந்த சடாமுடியாட; மானும் மழுவும் பொருந்தி வீற்றிருக்கின்ற திருக்கரங்களாட; திருப்பாதங்களின் கழல் ஒலியெழுப்ப, நடனமாடிய சிவனார் அளித்த செல்வமே!  பெரிய தினைப்புனத்தின் மீது இருந்தவளும், மைதீட்டிய, ஒளிபொருந்திய கண்களை உடையவளுமான வள்ளியம்மையைத் திருமார்புறத் தழுவிய மயில் வாகனனே!  அற்புதனே!  கந்தனே!  மன்மதன் வெற்றிபெறுவதற்கு ஏதுவாக பூவைச் சூட்டிக்கொண்ட பெண்கள் (அந்த மன்மதனுடைய சேட்டை பலிக்காததால்) ஆச்சரியப்படும்படியான பெரியதும் மெய்யானதுமான தவத்தை உடையவர்கள் வாழ்கிற திருத்தணி மலையில் வீற்றிருக்கின்ற தம்பிரானே!

எனக்கு புத்தி இருக்கிறதா?  நான் இனி யாரைப் போய் நாடுவேன்?  பிறந்த பிறப்பு வீணாகும்படியாக நான் இறக்க வேண்டுமா?  நீயே எனக்குத் தந்தையும் தாயும் என்று இருக்கும்போது நான் இப்படித் தவித்திடலாமா?  உலகத்தோரின் ஏச்சுக்கு ஆளாகலாமா?  (அப்படி என்னை) ஏசுபவர்களுடைய கண்ணுக்கு முன்னாலேயே (என் சிரத்தில்) உன் திருவடிகளை வைத்து, திருவடி தீட்சையை அளிப்பாயாக.  என்னுடைய நிலைமையை அறிந்திருந்தும் நீ அடியேனை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உலகத்தோர் நகைப்பார்கள் அல்லவா?  தந்தையின் முன்னே பாய்ந்தோடும் பிள்ளை, பால்மணம் மாறாத தன் வாயால் பெருங்குரலெடுத்து அழுதால் ‘இந்தப் பிள்ளையை யார் தூக்கிக் கொள்வது’ என்று வெறுத்தொதுக்கும் தாய் தந்தையரும் உலகத்தில் உண்டோ?  இந்த உண்மை என் மனத்துக்குத் தட்டுப்படாதோ?  (நீயே எனக்குத் தாயும் தந்தையுமாக இருக்கையில், என்னை நீ ஏற்றுக் கொள்ள மாட்டாய் என்று நான் கருதுவது அறிவீனம்; அழுகின்ற பிள்ளையை வாரியெடுத்துக்கொள்ளாத பெற்றோர்கள் உலகத்தில் இல்லை,  அது போலே நீயும் என்னை வாரியெடுத்துக் கொள்ளப் போவதே இயல்பு.  இந்த உண்மையை என் மனம் உணராதா?)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.