முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 380

பழனித் திருப்புகழான இது, தன்னிடத்தில்

Updated On : 16 அக்டோபர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:58 PM

பழனித் திருப்புகழான இது, தன்னிடத்தில் இல்லாதனவற்றையும் இருப்பனவற்றையும் எண்ணி, இரங்கி ஞானியரோடு என்றும் இணக்கமாக இருப்பதைக் கோருகிறது.  நம்மிடத்தில் உள்ள பரிவால் குருநாதர் நம்மிடம் உள்ளன, இல்லாதனவற்றைத் தம்முடையனவையாய் பாவித்து இறைவனிடம் கோரிக்கையை வைக்கிறாரே ஒழிய இக்குற்றங்கள் அவரிடத்தில் இருப்பதாகவோ, நற்பண்புகள் இல்லாததாகவோ பொருளில்லை.  அவை ஒரு காலத்தில் இல்லாதனவாகவே—ஒரு பெயருக்காக—வைத்துக்கொண்டாலும் இறைவன் அவரை ஆட்கொண்ட பின்னால் இவை அவருடைய தன்மைகளாக இருக்க இயலாது.  இறைவன் அவரை ஆட்கொண்டதை அமுதமாகப் பெருகும் அவருடைய வாக்கே சாட்சிபூதமாக நின்று சொல்கிறது.  இவ்வளவு நாளாக நாம் பார்த்துவரும் மிகவும் சிக்கலான சந்தக் கட்டும் எழுத்தமைப்பையும் கொண்ட பாடல்களை இறையருளில்லாமல் பாடமுடியாது.

இன்றைய பாடலில் அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகள்; ஒவ்வொரு மடக்கிலும் முதலெழுத்தும் ஆறாம் எழுத்தும் தொடர்ந்து நெடில்; மற்ற அனைத்தும் குறில்; ஒற்று சேர்த்து ஒவ்வொரு மடக்கிலும் நான்காம் எழுத்தும் ஒன்பதாம் எழுத்தும் மெல்லொற்று.  வல்லொற்று பயிலவே இல்லை.  பாடலைப் பார்ப்போம்.

தான தந்தன தான தந்தன
      தான தந்தன தான தந்தன
      தான தந்தன தான தந்தன   -   தனதான

Advertisement

மூல மந்திர மோத லிங்கிலை
         யீவ திங்கிலை நேய மிங்கிலை
         மோன மிங்கிலை ஞான மிங்கிலை - மடவார்கள்
      மோக முண்டதி தாக முண்டப
         சார முண்டப ராத முண்டிடு
         மூக என்றொரு பேரு முண்டருள் - பயிலாத
கோல முங்குண வீன துன்பர்கள்
         வார்மை யும்பல வாகி வெந்தெழு
         கோர கும்பியி லேவி ழுந்திட  - நினைவாகிக்
      கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
         ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
         கூர்மை தந்தினி யாள வந்தருள் - புரிவாயே
பீலி வெந்துய ராலி வெந்தவ
         சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
         பீதி கொண்டிட வாது கொண்டரு - ளெழுதேடு
      பேணி யங்கெதி ராறு சென்றிட
         மாற னும்பிணி தீர வஞ்சகர்
         பீறு வெங்கழு வேற வென்றிடு - முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்
         பாக மொன்றிய வாலை யந்தரி
         ஆதி யந்தமு மான சங்கரி - குமரேசா
      ஆர ணம்பயில் ஞான புங்கவ
         சேவ லங்கொடி யான பைங்கர
         ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் - பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.