பகுதி - 382
இப்பாடல் திருச்செந்தூர் தலத்துக்கானது.
இறைவனுடைய திருவடியைப் பெறுவதை வரமாகக் கோரும் இப்பாடல் திருச்செந்தூர் தலத்துக்கானது. தொங்கல் சீரை ஒழித்து மற்ற அனைத்து சீர்களும் குறிலெழுத்தாக அமைந்துள்ளது. தொங்கல் சீரிலும் ‘பெருமாளே’ அல்லது ‘தம்பிரானே’ என்ற ஈற்றுச் சீர்களின் கடைசி இரண்டெழுத்துகளும் நெடிலாக இருப்பதால் இந்தச் சீர் நெடுகிலும் இதே அமைப்பே வரவேண்டுமென்றாலும், ஈற்றுக் குறில் நெடிலாக ஒலிக்கும் என்பதால் இதற்கு விலக்குண்டு. மற்ற பாடல்களின் தொங்கல்சீர் அமைப்பை எடுத்துக் கொண்டு ஒன்றொன்றாகப் பார்த்தால் இது விளங்கும். ஆனால் இந்தப் பாட்டில் எட்டுத் தொங்கல் சீர்களில் ஏழில் இரண்டு ஈற்றெழுத்துகளும் நெடிலாகவே அமைந்திருக்கிறது. ‘வனமாலி’ என்ற ஒரே ஒரு சீர் மட்டுமே விலக்கு. இது ‘வனமாலீ’ என்று ஒலிப்பதைக் காணலாம்.
அடிக்கு 34 எழுத்துகள் உள்ள இப்பாடலில் ஓரிடத்தில் ‘ல்’; இரண்டிடங்களில் ‘ர்’ என இடையின மெய் பயின்றுள்ளது. இடையின மெய் சந்தத்தைச் சிதைப்பதில்லை என்பதால் இது கணக்கில் வருவதில்லை. ‘நெறிதவறி’ என்று தொடங்கும் மூன்றாமடியில் ‘ன்’ என்ற மெல்லொற்று பயில்கிறது. ‘இனியதமிழ்’ என்ற சீரில் ஒரு மெல்லொற்று (ழ்) பயில்கிறது. இவையே விலக்கு. இவற்றைத் தவிர்த்து பாடல் நெடுகிலும் எந்தவகையான ஒற்றும் பயிலவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன - தனதானா
Advertisement
அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக - அகலாதே
அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
அழலினிகர் மறலியெனை - யழையாதே
செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர - மருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ் - பகர்வோனே
நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகரிய - வனமாலி
நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை - விடுவோனே
மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு
மகிழமடி மிசைவளரு - மிளையோனே
மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர் கரையிலுறை - பெருமாளே.