பகுதி - 388
இப்பாடல் திருத்தணித் தலத்துக்கானது.
பிறவிப் பிணியை அறுக்கக் கோரும் இன்றைய பாடல் திருத்தணித் தலத்துக்கானது. ‘அருக்கி மெத்தெனச் சிரித்து’ என்று இரண்டு பாடல்கள் தொடங்குகின்றன. இன்றைய பாடல் அவற்றிலொன்று. மற்றொன்று திருப்படிக்கரைத் தலத்துக்கானது. ஒன்றேபோலத் தொடங்கினாலும் இரண்டு பாடல்களும் சற்றே வேறுபட்ட சந்த அமைப்பினைக் கொண்டவை.
ஒற்றொழித்து அடிக்கு 28 எழுத்துகளைக் கொண்ட இந்தப் பாடலில் ஒற்றைச் சேர்த்து ஒவ்வொரு சீரிலும் மூன்றாவது எழுத்து வல்லொற்றாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம். இப்பாடலின் இரண்டாமடியிலுள்ள ‘தரிக்கும்வித்’ என்பதிலும்; மூன்றாமடியின் இறுதிப் பகுதியில் உள்ள ‘புரிக்கிரக்கம் வைத்த’ என்பதிலுமுள்ள மெல்லொற்றான ‘ம்’ என்னும் எழுத்து ஒலிக்கப்பெறாது. முதலடியிலுள்ள ‘பறிப்பவர் கபத்த முற்றுவித்து’ என்பதை ‘பறிப்பவர்(களுடைய) பத்தம் (பந்தம்) உற்று’ எனவும், ‘பறிப்பவர்க்கு (பறிப்பவரை) அபத்தம் உற்று’ என்றும் இரண்டுவிதமாகப் பிரிக்க முடியும். இதைப் பொருள் விளக்கத்தின் போது பார்க்கலாம். இப்போது பாடலைப் பார்ப்போம்.
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் - தனதான
Advertisement
அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத்
தழித்தறக் கறுத்தகட் - பயிலாலே
அழைத்தகப் படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க்
கடுத்தபத் தமுற்றுவித் - தகர்போலத்
தரிக்கும்வித் தரிக்குமிக் கதத்துவப் ப்ரசித்தியெத்
தலத்துமற் றிலைப்பிறர்க் - கெனஞானம்
சமைத்துரைத் திமைப்பினிற் சடக்கெனப் படுத்தெழச்
சறுக்குமிப் பிறப்புபெற் - றிடலாமோ
பொருக்கெழக் கடற்பரப் பரக்கர்கொத் திறப்புறப்
பொருப்பினிற் பெருக்கவுற் - றிடுமாயம்
புடைத்திடித் தடற்கரத் துறப்பிடித் தகற்பகப்
புரிக்கிரக் கம்வைத்தபொற் - கதிர்வேலா
திருத்தமுத் தமிழ்க்கவிக் கொருத்தமைக் குறத்தியைத்
தினைப்புனக் கிரித்தலத் - திடைதோயுஞ்
சிவத்தகுக் குடக்கொடிச் செருக்கவுற் பலச்சுனைச்
சிறப்புடைத் திருத்தணிப் - பெருமாளே.