பகுதி - 602
என்னை ஆள்வதற்கு உரியார் யார்
மனத்தோடு உரையாடத் தொடங்கி ‘உன்னையன்றி என்னை ஆள்வதற்கு உரியார் யார்’ என்று கேட்கும் இந்தப் பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது. பெரும்பாலும் நெடில் எழுத்துகளாலேயே அமைந்த ஒன்று.
அடிக்கு ஒற்றொழித்து பதினாறு எழுத்துகளைக் கொண்ட பாடல். இடையின ஒற்றுகள் கலந்தும் கலக்காமலும் வந்திருக்கின்ற அனைத்துச் சீர்களிலும் ஒற்றொழித்தால் ஒரு நெடில் அதைத் தொடர்ந்து இன்னொரு நெடில் என்று இரண்டே இரண்டு எழுத்துகளே அமைந்துள்ளன. ஆறாவது சீரில் மட்டும் ஒரு வல்லொற்று பயில்கிறது. மற்ற இடங்களில் வல்லொற்றோ மெல்லொற்றோ இல்லை.
தானா தானா தானா தானா
தானா தானத் தனதான
வாராய் பேதாய் கேளாய் நீதாய்
மானார் மோகத் துடனாசை
மாசூ டாடா தூடே பாராய்
மாறா ஞானச் சுடர்தானின்
றாரா யாதே யாராய் பேறாம்
ஆனார் வேதப் பொருள்காணென்
றாள்வாய் நீதா னாதா பார்மீ
தார்வே றாள்கைக் குரியார்தாம்
தோரா வானோர் சேனா தாரா
சூரா சாரற் புனமாது
தோள்தோய் தோளீ ராறா மாசூர்
தூளாய் வீழச் சிறுதாரைச்
சீரா வாலே வாளா லேவே
லாலே சேதித் திடும்வீரா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.