பகுதி - 582
பூம்பறை என்ற தலத்துக்கானது
பொதுமகளிர் உறவு அற்றுப் போக வேண்டும் என்று வேண்டுகின்ற இந்தத் திருப்புகழ், கொடைக்கானலுக்கு அருகேயுள்ள பூம்பறை என்ற தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் நான்கெழுத்துகளையும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் இரண்டெழுத்துகளையும் கொண்டவை.
தாந்ததன தான தாந்ததன தான
தாந்ததன தான தனதான
மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்
வாந்தவிய மாக முறைபேசி
வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி
வாழ்ந்தமனை தேடி உறவாடி
ஏந்துமுலை மீது சாந்துபல பூசி
ஏங்குமிடை வாட விளையாடி
ஈங்கிசைகள் மேய லாஞ்சனையி லாமல்
ஏய்ந்தவிலை மாதர் உறவாமோ
பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி
தாஞ்செகண சேசெ எனவோசை
பாங்குபெறு தாள மேங்கநட மாடு
பாண்டவர்ச காயன் மருகோனே
பூந்தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு
பூங்கதலி கோடி திகழ்சோலை
பூந்தடமு லாவு கோம்பைகள் குலாவு
பூம்பறையின் மேவு பெருமாளே.
Advertisement