பகுதி - 584
இந்தப் பாடல் எட்டிக்குடிக்கானது
‘என்னை ஆண்டருள்’ என்று வேண்டுகின்ற இந்தப் பாடல் எட்டிக்குடிக்கானது. தற்காலத்தில் இத்தலத்தை எட்டுக்குடி என்றும் வழங்கினாலும் ‘எட்டிக்குடி’ என்பதே முன்னர் நிலவி வந்த வடிவம் என்பதை இப்பாடல் வேறு வகையில் உறுதி செய்கிறது. ‘எட்டி’ மரத்துக்கு ‘காஞ்சிரம்’ என்றும் பெயருண்டு. எட்டிக்காயை காஞ்சிரங்காய் என்பார்கள். இந்தப் பாடலில் எட்டிக்குடியை அருணகிரியார் ‘காஞ்சிரங்குடி’ என்றே அழைக்கிறார்.
ஒவ்வொரு சீரும் வேறுவேறு வகையில் அமைந்துள்ள இந்தப் பாடலில் அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகள் உள்ளன. ஒன்றாம் சீரிலும் மூன்றாம் சீரிலும் இரண்டு எழுத்துகளும்; இரண்டாம் சீரிலும் நான்காம் சீரிலும் மூன்றெழுத்துகளும் இருந்தாலும் இவை அமைப்பு முறையில் மாறுபட்டவை. ஒன்றாம் சீரில் ஒரு நெடில், ஒரு மெல்லொற்று, ஒரு குறில் என்றும்; மூன்றாம் சீரில் ஒரு நெடிலும் ஒரு குறிலும்; இரண்டாம் சீரில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு மெல்லொற்றும்; நான்காம் சீரில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு மெல்லொற்றும் ஒரு வல்லெற்றுமாய்ப் பயில்கின்றன.
தாந்த தந்தன தான தனத்தம் தனதான
தாந்த தந்தன தான தனத்தம் தனதான
ஓங்கு மைம்புல னோட நினைத்தின் பயர்வேனை
ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் தனையாள்வாய்
வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் புகடாவி
வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் குமரேசா
மூங்கி லம்புய வாச மணக்குஞ் சரிமானு
மூண்ட பைங்குற மாது மணக்குந் திருமார்பா
காங்கை யங்கறு பாசில் மனத்தன் பர்கள்வாழ்வே
காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் பெருமாளே.
Advertisement