பகுதி - 594
இப்பாடல் சிதம்பரம் தலத்துக்கானது.
‘ஆடம்பரமானதும் பொய்யானதுமான இந்த வாழ்க்கை வெறும் பிரமை. இதில் உழலாமல் இருக்க, தேவர்களுக்கும் அரிதான உன்னுடைய திருவடிகளைத் தந்தருள்க’ என்று கோரும் இப்பாடல் சிதம்பரம் தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும், கணக்கில் சேராத ஒரு மெல்லொற்றும் ஒரு வல்லொற்றும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு நெடிலுமாக மூன்றெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனதந்தத் தனனா தனதன
தனதந்தத் தனனா தனதன
தனதந்தத் தனனா தனதன தனதான
சகசம்பக் குடைசூழ் சிவிகைமெல்
மதவின்பத் துடனே பலபணி
தனிதம்பட் டுடையோ டிகல்முர சொலிவீணை
தவளந்தப் புடனே கிடுகிடு
நடைதம்பட் டமிடோல் பலவொலி
சதளம்பொற் றடிகா ரருமிவை புடைசூழ
வெகுகும்பத் துடனே பலபடை
கரகஞ்சுற் றிடவே வரஇசை
வெகுசம்பத் துடனே யழகுட னிதமேவும்
விருமஞ்சித் திரமா மிதுநொடி
மறையும் பொய்ப் பவுஷோ டுழல்வது
விடவும்பர்க் கரிதா மிணையடி தருவாயே
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுர்தஞ்செச் செகசே செககண எனபேரி
திமிர்தங்கற் குவடோ டெழுகட
லொலிகொண்டற் றுருவோ டலறிட
திரள்சண்டத் தவுணோர் பொடிபட விடும்வேலா
அகரம்பச் சுருவோ டொளியுறை
படிகம்பொற் செயலா ளரனரி
அயனண்டர்க் கரியா ளுமையருள் முருகோனே
அமுர்தம்பொற் குவடோ டிணைமுலை
மதிதுண்டப் புகழ்மான் மகளொடும்
அருள்செம்பொற் புலியூர் மருவிய பெருமாளே.