பகுதி - 762
தியானிப்பதை அருளவேண்டும்
‘உன்னை எப்போதும் தியானிப்பதை அருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவாலங்காட்டுக்கானது. காரைக்காலம்மையாரின் பாடல் பெற்ற இத்தலம் சென்னைக்கு மேற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.
அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு நெடிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களிலும் மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களிலும் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாக மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனதானந் தானன தானன
தனதானந் தானன தானன
தனதானந் தானன தானன தனதான
Advertisement
கனவாலங் கூர்விழி மாதர்கள்
மனசாலஞ் சால்பழி காரிகள்
கனபோகம் போருக மாமிணை முலைமீதே
கசிவாருங் கீறுகி ளாலுறு
வசைகாணுங் காளிம வீணிகள்
களிகூறும் பேயமு தூணிடு கசுமாலர்
மனவேலங் கீலக லாவிகள்
மயமாயங் கீதவி நோதிகள்
மருளாருங் காதலர் மேல்விழு மகளீர்வில்
மதிமாடம் வானிகழ் வார்மிசை
மகிழ்கூரும் பாழ்மன மாமுன
மலர்பேணுந் தாளுன வேயரு ளருளாயோ
தனதானந் தானன தானன
எனவேதங் கூறுசொல் மீறளி
ததைசேர்தண் பூமண மாலிகை யணிமார்பா
தகரேறங் காரச மேவிய
குகவீரம் பாகும ராமிகு
தகைசாலன் பாரடி யார்மகிழ் பெருவாழ்வே
தினமாமன் பாபுன மேவிய
தனிமானின் தோளுட னாடிய
தினைமாவின் பாவுயர் தேவர்கள் தலைவாமா
திகழ்வேடங் காளியொ டாடிய
ஜெகதீசங் கேசந டேசுரர்
திருவாலங் காடினில் வீறிய பெருமாளே.